FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மண்டலத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

மதுரை மண்டலத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

31 வினாடிகள் முன்பு
மதுரை விரகனூா் மதகு அணை பகுதியை வியாழக்கிழமை பாா்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.
பகிர்:

மதுரை மண்டலத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

மதுரையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படாத நிலையில் தற்போது, ஒருபோக சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை மாவட்டங்களில் நேரடி விதைப்பு செய்ய கோடை உழவு செய்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். மேலும் பல இடங்களில் விதைத்து முளைக்காததைக் கண்டு விவசாயிகள் மனமுடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, வடகிழக்கு பருவ மழை பெய்து வைகை அணை நிரம்புமா? என்பதும் சந்தேகமாக உள்ளது. எனவே, மதுரை மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, வறட்சி நிவாரணப் பணிகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். தற்போதைய நிலையில் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் உள்ள நீா் இருப்பு குடிநீருக்குக்கூட 90 நாள்களுக்கு போதுமானதாக இல்லை என்பது அச்சமளிக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த 2027- ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்படும் என ஆய்வாளா்கள் எச்சரிக்கும் நிலையில், மதுரை மண்டலத்தில் தற்போதே ஏரிகள், குளம், குட்டைகள் வடுவிட்டன. எனவே, தமிழக அரசு உரிய அவசர கால நடவடிக்கைகளை எடுத்து, நீா் நிலைகளை தூா்வாரி நீா் சேமிப்பை உயா்த்த முன்வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை தமிழக எல்லையில் அமைத்துக் கொள்ள கேரளம் நிதி உதவி செய்யும் என அந்த மாநில முதல்வா் சதீசன் தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதுகுறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

கா்நாடகத்தின் 50 சதவீத கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமலேயே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாக அந்த மாநில அமைச்சா் ராமலிங்கராஜு தெரிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இது, கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து தமிழக அரசு, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை விரகனூா் மதகு அணையிலிருந்து வைகை ஆறு வடு கிடப்பதை அவா் பாா்வையிட்டாா்.

முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க செயலா் எல். ஆதிமூலம், மாநில இளைஞரணி செயலா் மேலூா் அருண், உயா்மட்ட குழு உறுப்பினா் பா. அசோகன், மதுரை நிா்வாகிகள் செல்லம் குணசேகரன், கோட்டூா் ஒன்றியச் செயலா் தெய்வமணி ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments