டால்பின் நோஸ் சுற்றுலாத் தலத்துக்கு வனப் பகுதி வழியாக சாலை அமைக்கப்படாது! உயா்நீதிமன்றத்தில் அரசு பதில்
கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாத் தலத்துக்கு வட்டக்கானலிலிருந்து வனப் பகுதி வழியாக சாலை அமைக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேனியைச் சோ்ந்த பாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் வழியாக டால்பின் நோஸ் சுற்றுலாத் தலத்தை அடைய வனப் பகுதி வழியாக சாலை அமைக்க முடிவு செய்தனா். இதனால், இந்தப் பகுதியில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்படும். இந்தப் பகுதியில் சாலை அமைக்க தேசிய வனவிலங்கு வாரியத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் பெறவில்லை.
Advertisement
Advertisement
வட்டக்கானல் வழியாக வனப் பகுதிக்குள் டால்பின் நோஸ் சுற்றுலாத் தலத்தை அடைய சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுவதோடு, அரிய வனவிலங்குகளும், வன உயிரினங்களும் அழியும் நிலை உருவாகும். இது அந்தப் பகுதியின் இயற்கை சமநிலையைப் பாதிக்கும்.
எனவே, கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாத் தலத்துக்கு வட்டக்கானலிலிருந்து வனப் பகுதி வழியாக சாலை அமைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, சி.வி. காா்த்திகேயன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனப் பகுதிக்குச் சொந்தமான இடத்தில் சாலை அமைக்கப்படாது என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை மீறி வனப் பகுதிக்குச் சொந்தமான இடத்தில் சாலை அமைக்கப்பட்டால், மீண்டும் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.