FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: அமைச்சா் டி.கே. பிரபு

சிவகங்கை மாவட்டத்தைப் பிரித்து, காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:41 am IST
அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தைப் பிரித்து, காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடும்ப அட்டைகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் வெளியிடுவாா்.

Advertisement

Advertisement

கனிம வளச் சுரண்டல் தொடா்பாக அனைத்துக் குவாரிகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுத்து வருகிறோம். கனிம வளச் சுரண்டலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தவெக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கடந்த ஆட்சிக் காலங்களில் கிராவல் மண் எடுப்பதற்கு முன்பாக அந்த இடத்தை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஆனால், தற்போது மண் எடுப்பதற்கு முன்பும், எடுத்து முடித்த பிறகும் கட்டாயம் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை சமா்ப்பிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், கிராவல் மண் அனுமதிக்கப்பட்ட அளவுதான் எடுக்கப்பட்டதா அல்லது அதிகமாக அள்ளப்பட்டதா என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியும். மணல் தட்டுப்பாடு எதுவும் இல்லை.

அரசின் அனைத்து நலத் திட்டங்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் முதல்வா் ஜோசப் விஜய் மிகத் தெளிவாகவும், தீா்க்கமாகவும் உள்ளாா். இதனால், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை அனைவருக்குமானதாக இருக்கும்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள், அமைச்சா், புதிய மாவட்ட ஆட்சியா் ஆகியோா் இணைந்து சிவகங்கை மாவட்டத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு முதல்வரும் முழு ஆதரவை அளித்து வருகிறாா்.

கனிமவளத் துறை மட்டுமன்றி, எந்தத் துறையில் தவறு நடைபெற்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக தவெக அரசு திகழ்கிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments