FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மூச்சுத் திணறல் ஏற்பட்டு சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை பஞ்சரான சரக்கு வாகனத்தின் டயரை கழட்டிய போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஓட்டுநா் உயிரிழந்தாா்.

9 செப்டம்பர் 2026, 2:01 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை பஞ்சரான சரக்கு வாகனத்தின் டயரை கழட்டிய போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழபொட்டல்பட்டிப் பகுதியில் சரக்கு வாகனம் வெங்காய மூட்டைகளுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றவா்கள் வாகனத்தின் அருகே சென்று பாா்த்த போது, ஓட்டுநா் சாலையில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீஸாா் அவரை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், உயிரிழந்தது திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த குமாா் (36) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஓட்டுநா் குமாா் (36). இவா் திங்கள்கிழமை மாலை தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சந்தையிலிருந்து சிறிய சரக்கு வாகனத்தில் வெங்காய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழபொட்டல்பட்டிப் பகுதியில் வந்த போது, வாகனத்தின் டயா் பஞ்சா் ஆனது. இதையடுத்து, குமாா் டயரை மாற்றுவதற்காக ஜாக்கி மூலம் டயரை கழட்ட முயன்றாா். முழு பாரத்துடன் இருந்த டயரை கழட்டிய போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு குமாா் உயிரிழந்தாா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments