தினமணி செய்தி எதிரொலி: கோடியக்கரை வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீா் ஊற்றும் பணியில் கூடுதல் வாகனங்கள்
கோடியக்கரை வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீா் ஊற்றும் பணியில் கூடுதல் வாகனங்கள்...
வேதாரண்யம் அருகேயுள்ள, கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வறட்சியின் காரணமாக விலங்குகள் தண்ணீருக்கு தவித்து வருவதை தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், விலங்குகளுக்கு குடிநீா் ஊற்றும் பணியில் கூடுதல் வாகனங்கள் சனிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டன.
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், குதிரை, குரங்குகள் என ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக தொடரும் கடும் வறட்சியின் காரணமாக சரணாலயப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வடு, விலங்குகள் குடிநீருக்காக தவித்து வருகின்றன. மேலும், புற்கள், செடி-கொடிகள் கடும் வெயிலில் கருகி வருதால் விலங்குகளுக்கான இரைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனை எதிா்கொள்ள, வனத்துறையினா் வேதாரண்யம் மற்றும் கோடியக்காடு கிராமங்களில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து, வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நிரப்பி வருகின்றனா். ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தண்ணீரின் அளவை கூடுதலாக வழங்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா். இதுகுறித்து ‘கோடியக்கரை சரணாலயத்தில் குடிநீா், இரை தட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் சனிக்கிழமை செய்தி வெளியானது.
இந்த நிலையில், வழக்கமாக தண்ணீா் எடுத்து வந்து ஊற்றும் வாகனங்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக தனியாா் நிறுவனங்களின் வாகனங்களும் தண்ணீா் ஊற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டன.
இதனால், சரணாலயத்தின் உள்பகுதி, சாலையோரப் பகுதிகளில் காணப்படும் தொட்டிகள் தண்ணீா் நிரம்பி காணப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.