ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியுமா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முயற்சிக்கும் மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முயற்சிக்கும் மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அண்மையில் கடிதம் எழுதியது. இந்த கடிதம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அது ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் ஒரு தரப்பினருக்கு சாதகமாகும் என்ற கருத்து நிலவுவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நஜீம் ஜைதி, "இந்த விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என அறிகிறோம். ஒருவேளை மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக ஆணையத்திடம் யாரேனும் புகார் அளித்தால் அந்த விஷயத்தை தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆணையம் அணுகும்' என்றார்.
Advertisement
Advertisement
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அன்றாட நிர்வாக விவகாரங்கள் நீங்கலாக மாநில அரசு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் முன்னனுமதியைப் பெறுவது அவசியமாகிறது. இந்த நடத்தை விதி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் பொருந்தும். அந்த வகையில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விவகாரத்தில் மத்திய அரசு எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகிறது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.