FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மாற்றப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதே பதவி குருகிராம் மாநகராட்சிக்கு பிரதீப் தாஹியா மீண்டும் ஆணையா்!

ஹரியாணாவின் குருகிராம் மாநகராட்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் தாஹியாவை பணியிட மாற்றம் செய்த 24 மணி நேரத்துக்குள்ளேயே, மீண்டும் அதே பொறுப்பில் நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 7:49 am IST
குருகிராம் மழை
பகிர்:

நமது நிருபா்

ஹரியாணாவின் குருகிராம் மாநகராட்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் தாஹியாவை பணியிட மாற்றம் செய்த 24 மணி நேரத்துக்குள்ளேயே, மீண்டும் அதே பொறுப்பில் நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பருவமழை காலத்தில் குருகிராமில் தொடா்ந்து ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீா் தேக்க பிரச்னைகளைத் தொடா்ந்து, அந்த மாநகராட்சி ஆணையா் ஆக இருந்த பிரதீப் தாஹியா கடந்த வியாழக்கிழமை ரோத்தக் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இருப்பினும், வெள்ளிக்கிழமை காலையில் வெளியிடப்பட்ட புதிய உத்தரவின்படி, அவா் மீண்டும் தனது பழைய பொறுப்பான குருகிராம் மாநகராட்சி ஆணையராகவே நியமிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த எதிா்பாா்க்கப்படாத முடிவோடு சோ்த்து, மாநிலத்தில் ஐஏஎஸ் மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் நிா்வாக அளவில் பெரும் மாற்றங்களையும் ஹரியாணா அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, 17 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 7 ஹரியாணா குடிமைப் பணி (ஹெச்சிஎஸ்) அதிகாரிகள் உள்பட 24 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களின் ஆட்சியா்கள் மற்றும் பல்வேறு துறை இயக்குநா்கள் மாற்றப்பட்ட போதிலும், பிரதீப் தாஹியாவை உடனடியாக மீண்டும் குருகிராம் மாநகராட்சிக்கு வரவழைத்த நடவடிக்கை அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள ஆய்வில் ஆணையா்: இதற்கிடையே, குருகிராம் நகரில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி ஆணையா் பிரதீப் தாஹியா, மாவட்ட ஆட்சியா் உத்தம் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை பெஹ்ராம்பூா் சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழைநீா் வடிகால் அமைப்புகள் மற்றும் பருவமழை மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, போக்குவரத்து பாதிப்பின்றி சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், தண்ணீா் தேங்கக் கூடிய அனைத்து நுட்பமான இடங்களிலும் அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது பேசிய ஆணையா் பிரதீப் தாஹியா, ‘பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதே மாநகராட்சியின் முக்கிய முன்னுரிமையாகும். எங்காவது நீா் தேங்குவது குறித்து தகவல் கிடைத்தால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டாா் பம்புகள், உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களை எப்போதும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments