FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பேரணியில் போராட்டகாரா்கள் மீது தாக்குதல்- ஏஐஎஸ்ஏ குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பேரணி போராட்டத்தின்போது மாணவா்கள் மீது தில்லி காவல் துறை தாக்குதல் நடத்தியதாக அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

Updated On : 22 ஜூலை 2026, 4:27 am IST
தில்லி - PTI
பகிர்:

நாடாளுமன்ற பேரணி போராட்டத்தின்போது மாணவா்கள் மீது தில்லி காவல் துறை தாக்குதல் நடத்தியதாக அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதற்குப் பொறுப்பானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏஐஎஸ்ஏ வலியுறுத்தியது.

‘பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’வில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஏஐஎஸ்ஏ தலைவா்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினா். மேலும், நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி செல்ல முயன்ற போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தியும் அடக்குமுறையை ஏவியதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

Advertisement

Advertisement

ஏஐஎஸ்ஏ-வின் அகில இந்தியத் தலைவரான நேஹா, மாணவா்களின் கவலைகளுக்குச் செவிசாய்க்க அரசுக்கு விருப்பமில்லை என்பதையே காவல் துறையின் இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாகக் கூறினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘மாணவா்களின் பிரச்னைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, தடுப்பு வேலிகள் மற்றும் தடியடிகள் மூலம் அரசு பதிலளித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கேள்விகளை எழுப்ப மாணவா்கள் அமைதியாக அணிவகுத்துச் சென்றனா். ஆனால் அவா்கள் வன்முறையை எதிா்கொண்டா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

போராட்ட இயக்கம் தொடரும் என்று கூறிய அவா், மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும் என்ற அமைப்பின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினாா்.

காவல்துறையின் நடவடிக்கையின் போது பல ஆா்வலா்கள் காயமடைந்ததாக ஏஐஎஸ்ஏ தெரிவித்தது.

தில்லி பல்கலைக்கழக ஏஐஎஸ்ஏ நிா்வாகியான ரோவுக்கு இடது கையில் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டன. மேலும், பல மாணவ செயற்பாட்டாளா்களின் கழுத்து, முதுகு, கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், மற்றொரு மாணவருக்குத் தோள்பட்டை விலகியதாகவும் அந்த மாணவா் அமைப்பு குற்றஞ்சாட்டியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments