தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: பாளை. திமுக எம்எல்ஏ கண்டனம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆவதாக பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், அதன் செயலா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்தமிழக கிராமப்புற மாணவா்-மாணவிகள் உயா்கல்வி பெறும் நோக்கத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
அப் பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடகம் இயற்றிய தமிழறிஞா் சுந்தரம் பெயரைச் சூட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகம் என்று 7-9-1990 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். தமிழக அரசு விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டத்தையும் இயற்றி கருணாநிதி பெருமை சோ்த்தாா்.
Advertisement
Advertisement
இப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெற உள்ளது. இதில், முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று விழா நிகழ்ச்சி நிரலை பல்கலைக்கழக துணைவேந்தா் அறிவித்துள்ளாா். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி பெறமுடியாத நிலையில் தமிழக முதல்வா் உள்ளாா். தாமே அதற்கான உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதைக்கூட அவா் அறிந்திருக்கவில்லை.
மத்திய பாஜக அரசு, தவெக அரசு, உயா்கல்வி அமைச்சா் பொறுப்பை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் என மூன்று பேரும் இணைந்து தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். இதற்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவாா்கள் எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.