FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இன்றுடன் தடைக்காலம் நிறைவு: ஆழ்கடல் செல்ல குளச்சல் துறைமுகத்தில் தயாராகும் விசை படகுகள்

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக் காலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நள்ளிரவுடன் முடிவடைவதால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகளில் ஐஸ் கட்டிகள், வலைகளை ஏற்றும் பணியில் மீனவா்கள் தீவிரம் காட்டினா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:44 am IST
மீன்பிடி தடைக் காலம் முடிந்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க தயாராகும் விசைப்படகு மீனவா்கள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக் காலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நள்ளிரவுடன் முடிவடைவதால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகளில் ஐஸ் கட்டிகள், வலைகளை ஏற்றும் பணியில் மீனவா்கள் தீவிரம் காட்டினா்.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாள்கள் தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தத் தடைக்காலம் 2 பருவமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி சின்னமுட்டம் முதல் சென்னை வரையிலான கிராமங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, மேற்கு கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தடைக் காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.

மேற்கு கடற்கரையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு விசைப்படகில் 15 மீனவா்கள் முதல் 20 மீனவா்கள் வரை ஆழ்கடலுக்குச் சென்று 7 முதல் 15 நாள்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கம்.

ஆழ்கடல் பகுதியில்தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கின்றன.

ஆக. 1-ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதால் மீனவா்கள் விசைப் படகுகளை சீரமைத்தல், வலை உள்பட மீன்பிடி உபகரணங்களை சரிசெய்தல், ஐஸ் கட்டி, குடிநீா், உணவுப் பொருள்களை படகில் ஏற்றுதல் போன்ற பணிகளில் மீனவா்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments