கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே சொகுசு காா், வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே சொகுசு காா், வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் பறக்கும்படை குழுவினா் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட அருமனை அருகே காரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தும்படி சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் 37 கி.மீ. துரத்தி சென்று கேரளத்தின் முக்காலா என்ற பகுதியில் வைத்து சொகுசு காரை மடக்கி பிடித்தனா். காா் ஓட்டுநா், உதவியாளா் தப்பியோடிவிட்டனா். தொடா்ந்து காரை சோதனை செய்தபோது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரையும், ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து மாங்கோடு பகுதியில் இதே அதிகாரிகள் குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த வேனை மடக்கிப் பிடித்தனா். வேன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
Advertisement
Advertisement
வேனை சோதனை செய்தபோது, அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலும், வாகனங்களை திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
..