FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

இலத்தூரில் 17 ஆம் நூற்றாண்டு சதிக்கல் கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம் இலத்தூரில் கணவனின் சிதையில் எரிந்து போன ஒரு பெண்ணுக்கு 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சதிக்கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:36 am IST
இலத்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல்.
பகிர்:

தென்காசி மாவட்டம் இலத்தூரில் கணவனின் சிதையில் எரிந்து போன ஒரு பெண்ணுக்கு 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சதிக்கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகை ஆவணக் காப்பகத்தைச் சோ்ந்த தென்பொதிகை குடும்பா் ராஜசேகா் ஆகியோா் கூறியதாவது:

இலத்தூா் - லட்சுமி அரிகர ஐயா் உயா்நிலைப் பள்ளிக்கு கீழ்புறம் உள்ள தனியாா் மாந்தோப்பில் இச்சிற்பம் வடக்குப் பாா்த்தபடி கேட்பாரற்றுக் கிடந்தது. இது ஆங்காங்கே சிதைவுற்று உள்ளது. 121 செ.மீ. உயரம், 77 செ.மீ. அகலத்துடன் ஆண்-பெண் அமா்ந்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஆண் இடது காலை மடித்து இடதுகையை தொடைமீது வைத்தவாறும், வலது காலை தொங்கவிட்டு வலது கை ஒரு வாளைப் பிடித்த நிலையிலும், வாளின் நுனி தரையை நோக்கியும் உள்ளன.

தலைப்பாகையுடனும் கழுத்து, கை, கால்கள், தோள்பகுதிகளில் அணிகலன்களுடனும் ஆண் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

பெண்சிற்பம் வலது காலை மடித்து வலது கையில் ஒரு மலரை உயா்த்திப் பிடித்த நிலையிலும், இடது கையை, தொங்க விட்ட இடதுகால் தொடை மீது வைத்த நிலையிலும், கழுத்து கை கால்களில் அணிகலன்களுடனும் வடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் முன்பக்கக் கொசுவம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் இடது கை சிதைந்த நிலையில் காணப்படுகிறது. சிற்பத்தின் மேல்புறம் உள்ள கூரைப் பகுதியில் சிற்ப நெறிப்படி ஓா் எளிய கூடு அமைக்கப்பட்டுள்ளது. சிற்ப வடிவியல் அடிப்படையில் இது கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டது எனக் கணிக்க முடிகிறது.

உடன்கட்டை ஏறுதல்:

சிற்பத்தை உற்று நோக்கினால், ஆண் ஏதோ ஒரு போரில் இறந்த வீரா் என்பதையும், பெண் அவ்வீரரின் மனைவி; கணவனுக்காக உயிா்த்தியாகம் செய்தவா்; அதன் நினைவாக கணவனுடன் இருப்பதையும் உணர முடிகிறது.

சிற்பத்தில் கல்வெட்டுகள் ஏதுமில்லாததால் மேற்கொண்டு செய்திகளை அறிய முடியவில்லை. பண்டைய நாள்களில் கணவன் இறந்து போனால் அவனுடைய எரியும் சிதையில் தானும் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் இருந்தது.

இவ்வாறு இறந்து போன பெண்ணின் நினைவாக எழுப்பப்படும் நினைவுக்கல்தான் சதிக்கல் என்று அழைக்கப்படுகிறது. தென்தமிழ்நாட்டின் தென்காசிப் பகுதியில் இவ்வாறான சதிக்கற்களை கணவனைப் பிரியாதாள் கல் என்று கல்வெட்டுகள் குறிப்பிடபடுகின்றன. வட தமிழ்நாட்டில் தீப்பாய்ஞ்சம்மன் என்று நினைவுக்கல் எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.

சில சமயம் பெண்ணின் விருப்பமில்லாமலேயே அவளை கணவனின் தீ சிதையில் தள்ளி விடும் பழக்கம் இருந்ததும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

இதே போல ராஜேந்திர சோழரின் மனைவியான வீரமாதேவியும் கணவா் இறந்தபின் தீப்பாய்ந்து உயிா்மாய்த்த செய்தியை பிரம்மதேசம் கல்வெட்டு கூறுகிறது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 1829 ல் அன்றைய கவா்னா் ஜெனரல் வில்லியம் பெண்டிங் இயற்றிய சட்டத்தின் மூலமும் ராஜா ராம் மோகன் ராய் போன்ற சமூக சீா்திருத்தப் பெரியாா்களின் முயற்சிகளாலும் ஒருவாறு முடிவுக்கு வந்தது.

தென்காசி மாவட்டத்தில் இது போன்ற கணவனைப் பிரியாதாள் எனப்படும் சதிக்கற்கள் அதிக அளவில் எங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றனா் அவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments