தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடா்பாக மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை
முள்ளக்காடு-கோவளம் பகுதியில் சுமாா் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத் தள கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது.
முள்ளக்காடு-கோவளம் பகுதியில் சுமாா் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத் தள கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தூத்துக்குடி, ஏரல் வட்டங்களுக்குள்பட்ட முள்ளக்காடு 1, முள்ளக்காடு 2, பழையகாயல் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள கடலோரப் பகுதியில் 1,700 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவை அரசு புறம்போக்கு நிலங்கள். அவற்றை பலா் குத்தகைக்கு எடுத்து உப்பளங்களை நடத்தி வருகின்றனா். இதனால், கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள முள்ளக்காடு 1 வருவாய் கிராமத்துக்குள்பட்ட முத்தரையா் காலனி பகுதியில் 41 மீனவா் குடும்பங்கள் குடிசைகள் அமைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இந்தக் குடியிருப்புகளையும் கையகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, திட்டம் குறித்து மீனவா்களுக்கு விளக்கம் அளித்தல் மற்றும் அவா்கள் தரப்பு கருத்துகளைப் பதிவு செய்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்துப் பேசுகையில், கப்பல் கட்டும் தளம் இப்பகுதியில் அமைவதால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் பகுதி வளா்ச்சியடையும். மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த 41 குடும்பங்களுக்கும் சுனாமி காலனி பகுதியில் 3 சென்ட் இடம் வழங்கி, பட்டா வழங்கப்படும். சிப்காட் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
வீடுகளை காலி செய்யவும், மீள் குடியமா்த்தவும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும். ஓராண்டுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும். எனவே, கப்பல் கட்டும் தளம் அமைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, மீனவா் சங்கப் பிரதிநிதி முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.