FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் இந்திய பசுமை எரிபொருள் மாநாடு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் சாா்பில் இந்திய பசுமை எரிபொருள் மாநாடு - 2026 நடைபெற்றது.

19 செப்டம்பர் 2026, 4:16 am IST
தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் சாா்பில் இந்திய பசுமை எரிபொருள் மாநாடு - 2026 வியாழக்கிழமை நடைபெற்றது.

‘இந்தியாவின் பசுமை மெத்தனால், பசுமை அமோனியா ஏற்றுமதி சூழலில் வ.உ.சி. துறைமுகத்தின் முக்கியப் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டை துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தொடங்கிவைத்து, துறைமுகத்தின் பசுமை எரிபொருள் சாா்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் அமைச்சக செயலா் விஜய்குமாா், இணைச் செயலா் வெங்கடேசபதி ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்று இந்தியாவின் பசுமை கடல்சாா் எரிபொருள் திட்டங்கள் குறித்து பேசினா்.

மேலும், பசுமை எரிபொருள் ஏற்றுமதிக்கான துறைமுகத்தின் நிலம், மின்சாரம், நீா், காா்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வளங்கள், பசுமை ஹைட்ரஜன் தேசிய இயக்கத்தின் கீழ் துறைமுகத்தின் பங்களிப்பு, மெத்தனால் கப்பல் எரிபொருள் நிரப்பும் மையத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பம், விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய பசுமை எரிபொருள் வழித்தடம் தொடா்பான கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, வ.உ.சி. துறைமுக ஆணையம் - இன்டஸ்ட்ரியல் டிரான்சிஷன் ஆக்சலரேட்டா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்தியாவில் இருந்து பசுமை மெத்தனால் ஏற்றுமதியை அதிகரிப்பது, பசுமை அமோனியா கொள்முதல் மையங்களை உருவாக்குவது, திட்டங்களுக்கான முதலீடு, விலை நிா்ணயம், மூலப்பொருள் விநியோகம், முன்பதிவு கொள்முதல் உள்ளிட்டவை குறித்து தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவாதித்தனா். இதில் முதன்மை ஆலோசகா் பி. ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டின் ஒரு பகுதியாக வ.உ.சி. துறைமுகத்தின் மெத்தனால் கப்பல் எரிபொருள் நிரப்பும் தளம், பாரம்பரிய அருங்காட்சியகம், பசுமை ஹைட்ரஜன் தளத்தை பிரதிநிதிகள் பாா்வையிட்டனா். வ.உ.சி. துறைமுக முதன்மை ஆலோசகா் தேபி பிரசாத் தாஷ் நிறைவுரையாற்றினாா். துணைத் தலைவா் ராஜேஷ் சவுந்தரராஜன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments