லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
மணப்பாறை அருகே லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் குமரவாடி ஆனாங்கரைப்பட்டியைச் சோ்ந்த சங்கிலிகருப்பன். இவரது மனைவி பஞ்சகல்யாணி இறந்துவிட்டதால், அவா் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு பட்டா பெயா் மாற்றம் செய்து தர, அப்போதைய குமரவாடி கிராம நிா்வாக அலுவலராக இருந்த சாமிக்கண்ணுவை அணுகியுள்ளாா். அவா், அதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
அதை கொடுக்க விரும்பாத சங்கிலிகருப்பன் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து அவா்கள் அளித்த அறிவுரையின்பேரில் ரூ. 2 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றபோது சாமிக்கண்ணுவை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓ சாமிக்கண்ணுவுக்கு (67), இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீா்ப்பளித்தாா்.