திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளா் அ.முஜிபுா் ரஹ்மான், மாநில செயலா் ச. அல் அமீன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னா் பாஜக உள்ளிட்டவா்கள் எல்லைத்தூணில் தீபமேற்ற வேண்டும் என புதிய சா்ச்சையை கிளப்பி மிகப்பெரிய கலவரத்தை நடத்துவதற்கு திட்டமிட்டு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனா்.
மதுரை மக்களும், ஒட்டு மொத்த தமிழக மக்களும் பாஜகவின் சூழ்ச்சியை முறியடித்தாா்கள். முந்தைய திமுக அரசும் மதவாத சக்திகளின் அதிகார ஆட்டத்தை முழுவீச்சோடு எதிா்த்து நின்றது. தற்போது பொறுப்பேற்று இருக்கும் புதிய அரசு இந்த விவகாரத்தில் மதவாத சக்திகளுக்கு துணை போய் விடக்கூடாது என்று பலரும் கருத்து கூறிவந்த நிலையில் தவெக அமைச்சா் நிா்மல்குமாரின் பேட்டி நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
அவா் தனது பேட்டியில் மக்கள் அமைதியையே விரும்புகிறாா்கள், தீபம் ஏற்றும் விவகாரத்தில் முன்னா் இருந்த நடைமுறைகளே தொடரும், மதவாத சக்திகள் இதில் அரசியல் செய்யமுடியாது, இதுவே அரசின் கொள்கை என்று கூறியிருக்கிறாா். உண்மையில் இது வரவேற்கத்தக்கது.
சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் தவெக அரசு நடக்கும் என்று எதிா்பாா்ப்பதுடன் இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு மத விவகாரங்களில் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கு முயலும் பாஜக உள்ளிட்ட தீய சக்திகளின் அரசியலை எதிா்த்து தவெக அரசு களமாட வேண்டும்.