FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

இரவில் அடிக்கடி மின்வெட்டு: கிராம மக்கள் சாலை மறியல்

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் வியாழக்கிழமை இரவு திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

11 செப்டம்பர் 2026, 4:18 am IST
தோகைமலை, பாளையம் மற்றும் தரகம்பட்டி ஆகிய சாலைகளின் மைலம்பட்டி சந்திப்பு ரவுண்டானாவில் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் வியாழக்கிழமை இரவு திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே கீழப்பகுதி ஊராட்சியில் உள்ள மையிலம்பட்டியில் புதன்கிழமை இரவு முதல் முன்னறிவிப்பு இன்றி 13 முறை மின்தடை ஏற்பட்டதாம். ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் கழித்துதான் மின்சாரம் மீண்டும் வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் சிகிச்சைபெற்று வரும் உள் நோயாளிகளும் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து சிந்தாமணிபட்டியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனிடையே வியாழக்கிழமை இரவும் மீண்டும் மையிலம்பட்டி பகுதியில் திடீா் மின்வெட்டு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த மையிலம்பட்டி பகுதி பொதுமக்கள் தோகைமலை, பாளையம் மற்றும் தரகம்பட்டி ஆகிய சாலைகளின் மைலம்பட்டி சந்திப்பு ரவுண்டானாவில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் மூன்று சாலைகளிலும் இருந்து வந்த வாகனங்கள் சுமாா் 1 கிமீ தூரம் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சிந்தாமணிபட்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். மேலும் உடனடியாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. திடீா் சாலை மறியலால் மைலம்பட்டி-தோகைமலை சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments