முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு அருகே இலைகளைத் தாக்கும் வெட்டுக்கிளிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் செடிகள், மரங்களில் உள்ள இலைகளைத் தாக்கி வருகின்றன.

Updated On : 19 ஜூன், 2020 at 6:28 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் செடிகள், மரங்களில் உள்ள இலைகளைத் தாக்கி வருகின்றன.

திருவையாறு அருகேயுள்ள மணத்திடல் கிராமத்தில் பலா கன்று, மருதாணி, வாழை, கொய்யா, சுண்டைக்காய் போன்ற செடி, மரங்களின் இலைகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் மொய்த்து வருகின்றன.

ஒவ்வொரு மரத்திலும், செடியிலும், ஏராளமான வெட்டுக்கிளிகள் அமர்ந்து இலைகளை அரித்து சாப்பிடுகிறது. இதனால், இலையில் உள்ள பச்சை நிறம் மறைந்து இளம் பச்சையாக மாறி வருகிறது. 

Advertisement

மேலும், பல இலைகள் முற்றிலுமாக அரிக்கப்பட்டு, காம்பும், நரம்பும் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதுகுறித்து மணத்திடல் சிவக்குமார் தெரிவித்தது: ஒவ்வொரு மரத்திலும், செடியிலும் 40 - 50 வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. இதற்கு முன்பு வந்த வெட்டுக்கிளிகள், நாம் அருகில் சென்றாலே ஓடிவிடும்.

ஆனால், இந்த வெட்டுக்கிளிகளின் அருகில் சென்றால்கூட இலைகளை விட்டு நகராமல் தொடர்ந்து அரித்து சாப்பிடுவதிலேயே உள்ளது. 

பிடிக்கச் சென்றால் கூட நகரவோ, பறந்து செல்லவோ இல்லை. இதற்கு முன்பு இதுபோன்ற வெட்டுக்கிளியைப் பார்த்ததில்லை என்றார் அவர்.
 தகவலறிந்த வேளாண்துறை அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.