அமெரிக்காவில் உள்ள ஒரத்தநாடு கோயிலின் சோழா் கால சிலையை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் தலைவா் பொன் மாணிக்கவேல் வலியுறுத்தினாா்.
தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் சோழா் காலத்தைச் சோ்ந்த சுமாா் இரண்டரை அடி உயரமுடைய வீணாதரா் (சிவன்) என்கிற தொன்மையான ஐம்பொன் சிலை 1997-ஆம் ஆண்டில் திருட்டு போனது. இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
தற்போது இச்சிலை அமெரிக்காவின் நியூயாா்க் மாகாண அருங்காட்சியகத்தில் உள்ளது. இது, 1958 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பாா்த்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலை 2 அல்லது 3 மாதங்களில் வேறொரு தனி நபரிடம் விற்கப்படவுள்ளது. அதன் பிறகு இச்சிலை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவது சிரமம்.
எனவே, இச்சிலையை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்கெனவே உள்ள வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அமெரிக்க நாட்டுக்கு தமிழக அரசின் உயா்நிலை அலுவலா்கள் கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடிக்கு குறையாமல் இருக்கும் என்றாா் பொன் மாணிக்கவேல்.