தஞ்சாவூர் அருகே ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை காவியாவை அவரது காதலன் அரிவாளால் வெட்டி வியாழக்கிழமை காலை படுகொலை செய்தார்.
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில், மேல களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (வயது 26).
இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், காவியாவை வேறொருவருக்கும் அவரது பெற்றோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இந்த விவரத்தை தெரிவிக்காமல் அஜித்குமாரிடம் காவியா தொடர்ந்து பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலை தெரிவித்த காவியா, அதற்கான புகைப்படங்களையும் அஜித்குமாருக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், இன்று காலை வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த காவியாவை வழிமறித்துள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவியாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காவியாவின் உடலைக் கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்கு சென்ற ஆசிரியர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.