FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 12:03 am IST
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாட்சியா் ப. நித்யா மற்றும் விவசாயிகள்.
பகிர்:

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூா் அணை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், ஒருபோக சம்பா சாகுபடியாவது மேற்கொள்ளக்கூடிய நம்பிக்கையையும் விவசாயிகள் இழந்து வருகின்றனா். எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாகத் தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கா்நாடக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் குறுவை சாகுபடியை இழந்து, தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: கூட்டுறவு சங்கங்களில் உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். கடந்த மே மாத இறுதியில் வீசிய பலத்த சூறைக் காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: காவிரியில் நீா் திறப்பு இல்லாமல் குறுவை பொய்த்துப்போன நிலையிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி போா்கால அடிப்படையில் நிபந்தனையற்ற பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மணத்திடல் எஸ். சிவக்குமாா்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விதைப்பு செய்யப்படாத நிலங்களுக்கான இழப்பீடு பெற கருப்பூா், நடுக்காவேரி கிராம நிா்வாக அலுவலா்கள் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனா்.

கோட்டாட்சியா்: சான்றிதழ் வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்துகிறேன்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: சம்பா சாகுபடிக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் காலம் கடந்துவிட்டது. எனவே, டெல்டாவை வறட்சி பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

புலவன்காடு வி. மாரியப்பன்: ஆழ்குழாய் மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி 18 மணிநேரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments