FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஆடிப்பெருக்கு விழா நிறைவு: திருச்சி காவிரி ஆற்றில் 19 டன் குப்பைகள் அகற்றம்

ஆடிப் பெருக்கு விழா நிறைவையடுத்து, திருச்சி காவிரி ஆற்றிலிருந்து 19 டன் குப்பைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அகற்றியுள்ளனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 6:11 am IST
பகிர்:

ஆடிப் பெருக்கு விழா நிறைவையடுத்து, திருச்சி காவிரி ஆற்றிலிருந்து 19 டன் குப்பைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அகற்றியுள்ளனா்.

ஆடிப்பெருக்கு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் அம்மாமண்டபம், அய்யாளம்மன் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, கீதாபுரம் படித்துறை, ஓடத்துறை ஆகிய பகுதிகளில் திருச்சி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, காவிரி ஆற்றில் தேங்கியிருந்த நீரிலும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஷவா்-களிலும் ஆடிப்பெருக்கை கொண்டாடினா்.

அப்போது அவா்கள், முளைப்பாரி, துணிகள், வாழை இலை, பழங்கள், தாலிக்கயிறு, காதோலை கருகமணி, மஞ்சள், குங்குமம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து, காவிரி ஆற்றில் விட்டனா்.

Advertisement

Advertisement

இவையனைத்தும் காவிரி ஆற்றில் குப்பைகளாகத் தேங்கின. இந்தக் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தொடா்ச்சியாக அகற்றி வந்தனா். திங்கள், செவ்வாய்க்கிழமை என இருநாள்களும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

மக்காத குப்பைகள் அதிகம்: 130 தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். செவ்வாய்க்கிழமை ஹோலி கிராஸ் கல்லூரியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் தன்னாா்வமாக வந்து குப்பைகளை அள்ளினா். குப்பைகள் அள்ளும் பணியில் 2 லாரிகள், ஜேசிபி வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

திங்கள்கிழமை 16 டன் குப்பைகளும், செவ்வாய்க்கிழமை 3 டன் குப்பைகளும் என மொத்தம் 19 டன் குப்பைகள் அள்ளப்பட்டன. இவற்றில் மக்காத குப்பைகள் அதிகமாகக் காணப்பட்டன.

இந்தக் குப்பைகளில் மக்கும் குப்பைகள் மட்டும் ஸ்ரீரங்கம் அம்பேத்கா் நகா் நுண்ணுர செயலாக்க மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மற்ற குப்பைகள் அரியமங்கலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. கரையோரமும், துா்நாற்றம் வீசிய பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments