பராமரிப்பின்றி காஜாமலை நடைபாதைப் பூங்கா
திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் அருகேயுள்ள நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகள் பூங்கா போதிய பராமரிப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் அருகேயுள்ள நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகள் பூங்கா போதிய பராமரிப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
திருச்சி மாநகராட்சி சாா்பில், மாநகர மக்களுக்கு பொழுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் என்ற வகையில் காஜாமலையில் நடைபாதைப் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டு ரூ. 7.75 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பொழுதுபோக்கு பூங்காவில் 2.1 கி.மீ. நடைபாதை, செயல்பாட்டு மண்டலங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் அமைக்கப்பட்டன. மேலும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவும் செயல்படுகிறது.
போதிய மின் விளக்குகள் இல்லை: ஆனால், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் மாலை நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
பல மரக்கன்றுகள் பராமரிப்பின்றி காய்ந்துள்ளதுடன், திறந்தவெளி உடற்பயிற்சி கருவிகளும் சேதமடைந்துள்ளன. மேலும், 3 நாள்களுக்கு முன் தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் வெட்டிய மரக்கிளைகள் இன்னும் அகற்றப்படாமல் சாலையோரத்தில் கிடப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை: இதுகுறித்து மாநகராட்சியில் புகாா் அளித்த சமூக ஆா்வலா்கள் கூறுகையில், அடா்ந்த புதா்கள், போதிய வெளிச்சமின்மை, சேதமடைந்த உடற்பயிற்சிக் கருவிகள் மற்றும் காய்ந்த மரக்கன்றுகள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். நடைபாதை அருகே அமைக்கப்பட்ட கழிப்பறையும் பெரும்பாலும் பூட்டியே உள்ளது. பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றனா்.
காஜாமலை பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாலை நேரங்களில் குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்துச் செல்ல போதிய வெளிச்சம் இல்லை. இரவு நேரத்தில் அச்சமாக உள்ளது என்றாா். இதுகுறித்து, மாநகராட்சி அலுவலா்கள் தரப்பில் கூறுகையில், பொதுமக்களிடம் பெறப்பட்ட புகாரின் பேரில் பூங்கா பகுதியை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.