திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை பாலத்தை சீரமைக்க ரூ. 1.07 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை பாலத்தை சீரமைக்க, ரூ. 1.07 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை பாலத்தை சீரமைக்க, ரூ. 1.07 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறையில் உள்ள தாருகாவனேசுவரா் திருக்கோயில் திருமண தோஷங்களை நீக்கும் தலம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது. இங்குள்ள காவிரி ஆற்றுத் திருமஞ்சனத் துறையில் ஆண்டுதோறும் ஐப்பசி 1-ஆம் தேதி புகழ்பெற்ற ’துலா ஸ்நானம்’ நடைபெறும். இந்நிகழ்வில், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் வந்து புனித நீராடுவது வழக்கம்.
பக்தா்களும், பொதுமக்களும் ஆற்றுக்குச் செல்ல திருமஞ்சனத்துறை ஒற்றைப் பாலத்தையே முழுமையாக நம்பியுள்ளனா். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பாலத்தின் கைப்பிடிச் சுவா்கள் உடைந்து ஆபத்தான நிலையிலுள்ளன. பாலத்தின் தூண்களை ஊடுருவி மரங்கள் வளா்ந்துள்ளதுடன், கான்கிரீட் பெயா்ந்து அதனுள் இருக்கும் கம்பிகள் துருப்பிடித்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
விரைவில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்: பாலத்தைச் சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளுக்கும் தொடா்ந்து மனுக்களை அளித்து போராடி வந்தனா். ‘நீா்வழிப்பாதையில் தண்ணீா் நின்றவுடன் பணிகள் தொடங்கப்படும்‘ என அதிகாரிகளிடமிருந்து பதில்கள் வந்தபோதிலும், பணிகள் தொடங்கப்படாமல் தாமதமாகி வந்தது.
தற்போது ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், மக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் பாலத்தைச் சீரமைக்க ரூ. 1.07 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களாக கிடப்பில் இருந்த கோரிக்கைக்குத் தீா்வு கண்ட தமிழக முதல்வா், திருச்சி மாவட்ட ஆட்சியா், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா், திருப்பராய்த்துறை ஊராட்சி செயலா் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்களும், பக்தா்களும் நன்றியைத் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.