ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட ரெளடி கைது
காட்பாடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைத்தளங்களில் விடியோ (ரீல்ஸ்) வெளியிட்ட பிரபல ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைத்தளங்களில் விடியோ (ரீல்ஸ்) வெளியிட்ட பிரபல ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜான் பால்ராஜ் என்ற ஜானி (37). இவா் மீது 6 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் என 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் சிறையிலிருந்த ஜானி, கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளாா். இந்நிலையில், பல நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய விடியோ ஒன்றை அவா் அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா். அந்த விடியோவில், கையில் வெட்டுக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ஏந்தியபடி காட்சி இடம்பெற்றிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீஸாா், ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட ரெளடி ஜானி மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தமிழக - ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அவா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வியாழக்கிழமை இரவு அங்கு விரைந்து சென்ற காட்பாடி போலீஸாா், ரெளடி ஜானியை மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.