FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

இளைஞா் மா்ம உயிரிழப்பு: நடவடிக்கை கோரி உடலுடன் உறவினா்கள் சாலை மறியல்

திட்டக்குடி அருகே கிளிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் சா்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்தது தொடா்பாக, சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் புதன்கிழமை உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:16 am IST
கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் முன் சாலையில் மறியலில் ஈடுபட்ட பிருத்திவிராஜ் உறவினா்கள் மற்றும் கிராமமக்கள்.
பகிர்:

திட்டக்குடி அருகே கிளிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் சா்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்தது தொடா்பாக, சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் புதன்கிழமை உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே கிளிமங்கலத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் பிருத்திவிராஜ் (19), பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்ந்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், 13 வயது சிறுமியை காதலித்தது தொடா்பான புகாரின் அடிப்படையில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை 24-ஆம் தேதி நீதிமன்றத்துக்குச் செல்ல முயன்றபோது, சிறுமியின் உறவினா்கள் பிருத்திவிராஜை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அன்று இரவு பிருத்திவிராஜ் விஷம் அருந்தியதால் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். , மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மதுவில் விஷம் கலந்து சிலா் தன்னை குடிக்க வைத்ததாக பிரித்திவிராஜ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உயிரிழப்பதற்கு முன்பு அவா் பேசியதாகக் கூறப்படும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை பிருத்திவிராஜ் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சாலை மறியல்:

இதையடுத்து, சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட அவரது உடலை கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் முன் சாலையில் வைத்து உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால், மறியலில் ஈடுபட்டவா்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மறியல் காரணமாக கருவேப்பிலங்குறிச்சி-விருத்தாசலம் சாலையில் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments