FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

விருத்தாசலம் அருகே பாலக்கரையில் உள்ள மணிமுத்தாறில் இரு கரைகளிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:06 am IST
பகிர்:

குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், விருத்தாசலம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கம்மாபுரம், பொன்னேரி, புதுகூரப்பேட்டை, பாலக்கரை, வீராரெட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஊ.ஆதனூா் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான புரதச்சத்து மிட்டாய் மற்றும் சத்துமாவு தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

விருத்தாசலம் புறவழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், விபத்துகளைத் தடுக்கும் வகையில் பொன்னேரி பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை விரிவுபடுத்துவதற்கான முன் மதிப்பீட்டு அறிக்கையை விரைந்து சமா்ப்பிக்க போக்குவரத்து, காவல், வட்டாரப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, விருத்தாசலம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பத்திரப்பதிவு நடைமுறைகள் மற்றும் சாா் - நிலை கருவூல அலுவலக செயல்பாடுகளை குறித்தும் அதிகாரிகளுடன் கேட்டறிந்தாா். விருத்தாசலம் உழவா் சந்தை, பாலக்கரை அருகே மணிமுத்தாறு கரைகளில் குப்பை அகற்றும் பணிகள், புகா் அரசு சுகாதார நிலைய சேவைகள், பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவா் சோ்க்கை, ஆய்வக வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

வீராரெட்டிக்குப்பம் அமலா குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளின் கல்வி, உடல்நலம், மனநலம் தொடா்பான பதிவேடுகளைப் பாா்வையிட்டு, பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவா், தொடா்ந்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, அரசுத் திட்டங்கள் விரைந்து மக்களைச் சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

பின்னா், ஆட்சியா் கூறியது: முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் நோக்கம். இதனடிப்படையில், விருத்தாசலம் வட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கிராம வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு, குடிநீா், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், நியாயவிலைக் கடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் தகுதியான அனைவருக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியரின் கள ஆய்வு வியாழக்கிழமை (ஜூலை 16) வரை நடைபெறுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments