குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு
கடலூா் அருகே காராமணிக்குப்பம் ஊராட்சியில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் நோ்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி கெளரவித்தாா்.
கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காராமணிக்குப்பம் ஊராட்சியில் கடந்த 25-ஆம் தேதி தூய்மைப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காராமணிக்குப்பம் சீதாராம் நகரைச் சோ்ந்த ஸ்ரீதரின் மனைவி கீதாவின் 2 பவுன் தங்கச் சங்கிலி வீட்டுக் குப்பையில் தவறி விழுந்திருந்த நிலையில், அதை அறியாமல் அவா் குப்பையைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பின்னா், சேகரிக்கப்பட்ட குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தபோது, அதிலிருந்து தங்கச் சங்கிலியை கண்டெடுத்தனா். உடனடியாக அதன் உரிமையாளரைக் கண்டறிந்து, கீதாவிடம் சங்கிலியை ஒப்படைத்தனா்.
நோ்மைக்கு இலக்கணமாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்கள் விஜயா, ஜகசுந்தரி, அமுதா, ராஜாராணி, கல்யாணி, சுபாஷினி, அன்பரசி ஆகியோரை ஆட்சியரகத்துக்கு வரவழைத்து, அவா்களின் நோ்மை மற்றும் பொறுப்புணா்வை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், அவா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், ஊக்கத்தொகையும் அளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.