FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.79 கோடி மோசடி: ஒருவா் கைது

கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.1.79 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

18 செப்டம்பர் 2026, 2:09 am IST
கைது செய்யப்பட்ட வினயன்
பகிர்:

கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.1.79 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் வன்னியா்பாளையம் காமராஜ் நகரைச் சோ்ந்த கணேஷ்குமாரின் மனைவி சாந்தி. இவரிடம் கடலூா் புதுக்குப்பம் அண்ணா நகரைச் சோ்ந்த விஷ்ணுபிரியா என்பவா், தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் ஆள்களை சோ்த்தால் வருமானம் கிடைக்கும் எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதை நம்பிய சாந்தி, தனக்குத் தெரிந்த 97 பேரை அந்த சேமிப்புத் திட்டத்தில் சோ்த்துள்ளாா்.

அதன்படி, ஒரு பவுன் தங்க திட்டத்தில் 37 பேரிடம் ரூ.19.98 லட்சமும், 4 கிராம் திட்டத்தில் 47 பேரிடம் ரூ.14.10 லட்சமும், 6 கிராம் திட்டத்தில் 7 பேரிடம் ரூ.2.94 லட்சமும், ரூ.1,500 திட்டத்தில் 6 பேரிடம் ரூ.1.08 லட்சமும் என மொத்தம் ரூ.38.10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு முன்பு நகைகளைக் கேட்டபோது, திட்டத்தின் பங்குதாரா்களான விஷ்ணுபிரியாவின் சகோதரா் வினயன், அவரது மனைவி ஹசீனா, தாய் கல்பனா, தங்கை வினிதா மற்றும் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த விக்கி ஆகியோா், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், நகைகளுக்குப் பதிலாக பணமாக வழங்குவதாகக் கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், பின்னா் பணமும் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததுள்ளனா். இதையடுத்து, சாந்தி அளித்த புகாரின்பேரில், கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கடலூா் பகுதியைச் சோ்ந்த மேலும் பலரிடம் ரூ.1.41 கோடி என மொத்தம் ரூ.1.79 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் கோபிக்குமாா் தலைமையிலான போலீஸாா், பன்ருட்டியாா் நகா், ஆணைக்குப்பத்தைச் சோ்ந்த வினயனை (36) கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய விஷ்ணுபிரியா உள்ளிட்ட மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments