திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்: 5,000 மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த வாரமே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த வாரமே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை. இதனால், ஒரு மாதமாக சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் 136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அன்றைய தினமே 129.200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக கடந்த 6-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வரதராஜன்பேட்டை ஊராட்சி, ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொல்முதல் நிலையம் இதுநாள் வரையில் திறக்கப்படாமல் உள்ளது. இந்த மையத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, வரதராஜன்பேட்டை, குறுவப்பன்பேட்டை, மேலப்புதுப்பேட்டை, ரெட்டிபாளையம், கல்குணம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவந்துள்ள சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவியல் குவியலாக கொட்டி வைத்து, தாா்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது குறித்து கடந்த 11-ஆம் தேதி தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கடலூா் மண்டல மேலாளரை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு கேட்டபோது, மாவட்ட ஆட்சியரிடம் 11-ஆம் தேதி அனுமதி பெறப்பட்டு, 12-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.
ஆனால், ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை அறுவடை செய்து கொண்டுவந்து குவியல் குவியலாகக் கொட்டி வைத்து தாா்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனா். தற்போது அங்காங்கே மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள நெல் மணிகள் அனைத்தும் நனைந்து வீணாகும்.
மேலும், கடந்த ஒரு மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்துவிட்டு விற்பனைக்காக இரவு பகலாக விவசாயிகள் காவல் காத்து வருகின்றனா்.
இதுகுறித்து தரக்கட்டுப்பாட்டு மேலாளரை தொடா்பு கொண்டு பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடி கொள்முதல் எழுத்தா் பணியமா்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.