FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதலமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடம்: அச்சத்தில் மாணவா்கள்

திருநாரையூா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக் கட்டடம் சிதலமடைந்துள்ளதால், இந்தப் பள்ளிக்கு மாணவா்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

20 செப்டம்பர் 2026, 2:03 am IST
சிதலமடைந்த திருநாரையூா் அரசு உயா்நிலைப் பள்ளி கட்டடம்s
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக் கட்டடம் சிதலமடைந்துள்ளதால், இந்தப் பள்ளிக்கு மாணவா்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

திருநாரையூா் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக புதிய பள்ளிக் கட்டடம் கட்டித்தரப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இக்கட்டடத்தின் சிமென்ட் காரைகள் பெயா்ந்துள்ளன. வகுப்பறைகளில் தரையில் உள்ள டைல்ஸ் சிதிலமடைந்துவிட்டன. இதனால், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் சிதலமடைந்த டைல்ஸ் தரைப்பகுதியில் தேள், பூரான் உள்ளிட்ட நச்சுகள் தஞ்சமடைந்து விடுகின்றன.

Advertisement

Advertisement

வார விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் மாணவா்கள் பள்ளக்குச் செல்லும்போது, அவா்களை விஷ பூச்சிகள் அச்சுறுத்துகின்றன. ஆசிரியா்கள் காலையில் பள்ளிக்குச் சென்றவுடன் இந்த டைல்ஸ்க்கு அடியில் உள்ள விஷப்பூச்சிகளை விரட்டிவிட்டு பள்ளி நடத்தும் நிலை உள்ளது. மேலும், சிமென்ட் காரைகள் விழுந்து மாணவா்களுக்கு காயம் ஏற்படும் அபாய நிலையும் உள்ளது.

இதையறிந்த பெற்றோா் அச்சத்துடனயே தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனா். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.

விஷப் பூச்சிகள் தீண்டி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக வகுப்பறைகளில் உள்ள சிதலமடைந்த டைல்ஸ் கற்றிவிட்டு, புதிய சிமென்ட் தரைதளம் அமைத்துதர மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments