தங்கம், வைரம், சொகுசு கார்கள்... லாட்டரி மார்ட்டின் மகனுக்கு ரூ. 600 கோடி சொத்து! பிரமாண பத்திரம் தாக்கல்!!
லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ.600 கோடி சொத்து இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல்.
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகனும், லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ. 600 கோடி சொத்து இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளத்துக்கு வருகிற ஏப்.9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், மீதமுள்ள 14 இடங்களில் பாஜக 10, அதிமுக 2, லஜக-2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடந்த திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாண பத்திரத்தில் தனக்கு சுமார் ரூ. 600 கோடி சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.
ஜோஸ் சார்லஸ் மற்றும் அவரது மனைவி சிந்துஸ்ரீ பெயரில் சுமார் ரூ. 340 கோடி அசையும் சொத்தும், ரூ. 270 கோடி அசையா சொத்தும் வைத்திருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார். மேலும், அவர் கையிருப்பாக ரூ. 20.59 லட்சமும், அவரது மனைவி சிந்துஸ்ரீ சார்லஸிடம் ரூ. 1.82 லட்சமும் உள்ளது.
அதைத் தொடர்ந்து ரூ. 66.15 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், ரூ.1.29 கோடி மதிப்புள்ள டொயோட்டோ வெல்பையர் கார் ஆகியவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கார்கள், ரொக்கமாகத் தவிர்த்து சுமார் ரூ. 26 கோடி மதிப்பிலான 17.5 கிலோ தங்க ஆபரணங்களும், ரூ. 44 கோடியில் வைர நகைகளும், ரூ.3.77 கோடி மதிப்பில் சுமார் 135 கிலோ வெள்ளிப்பொருள்களும், ரூ. 38.53 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த கைக்கடிகாரங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது மனைவியிடம் ரூ. 5.35 கோடி மதிப்பிலான 3,655 கிராம் தங்கமும், ரூ. 2.10 கோடி மதிப்பிலான வைரங்களும், ரூ. 1.68 கோடி மதிப்பிலான 60 கிலோ வெள்ளியும், ரூ. 1.14 கோடி விலையுயர்ந்த கைக்கடிகாரங்களும் உள்ளன.
சார்லஸ் மார்ட்டினின் நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.59.37 கோடி வருவாய் ஈட்டியதாகக் கணக்கு காட்டியுள்ளது. அவர் பல்வேறு வங்கிகளில் ரூ. 200 கோடியை முதலீடு செய்துள்ளார். இதன்மூலம், அவருக்கு ஓராண்டில் ரூ.14.28 கோடி வருவாயாக கிடைத்திருக்கிறது.
ஜோஸ் சார்லஸிடம் விவசாயம் அல்லாத நிலம் ரூ. 192 கோடியிலும், அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சத்திலும் உள்ளன. மேலும், குடியிருப்பு கட்டடங்கள் ரூ. 269 கோடியிலும் அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சம் மதிப்பில் உள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக மார்ட்டின் நிறுவனம், திமுகவுக்கு சுமார் ரூ. 509 கோடியையும், திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ. 542 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 100 கோடியையும் நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.