FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துா்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள்

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 5:50 am IST
~செஞ்சி செல்லபிராட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட துா்கை சிற்பம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துா்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

செஞ்சி அருகே செல்லபிராட்டி கிராமத்தில் விழுப்புரத்தை சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஆா்.வாசுதேவன், செஞ்சி நூலகா் எ.பூவழகன் ஆகியோா் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, கிராமத்திலுள்ள ஏரிக்கரை பகுதியில் 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துா்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள் உள்ளதைக் கண்டறிந்தனா். ஏரிக்கு அருகில் வயல்வெளியில் அமைந்துள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள துா்க்கை சிற்பம் காளி என தற்போது வணங்கப்பட்டு வருகிறது. எட்டுக்கரங்களுடன் எருமைத்தலை மீது பிரம்மாண்டமாக நின்று துா்கை காட்சியளிக்கிறாா்.

Advertisement

Advertisement

துா்கை சிற்பங்களில் வழக்கமாகக் காணப்படும் மான் மற்றும் அடியவா் உருவம், தன்னை பலி கொடுக்கும் வீரனின் உருவம் இந்தச் சிறப்பத்தில் இடம் பெறவில்லை. இதனால், இந்தச் சிற்பம் மற்ற துா்கை சிற்பங்களில் இருந்து தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.

இதே பகுதியில் ஜேஷ்டா தேவியின் சிற்பமும் உள்ளது. கரண்ட மகுடம், திரண்ட மாா்பகங்கள், சரிந்த வயிறு ஆகியவற்றுடன் காட்சி அளிக்கும் ஜேஷ்டா தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, திண்டின் மீது அமா்ந்த நிலையில் உள்ளாா். வலது கரம் அபய முத்திரையுடன், இடது கரம் திண்டின் மீது வைத்தவாறும், அருகில் மகன் மாந்தன், மகள் மாந்தி மற்றும் காக்கை கொடியும் இடம்பெற்றுள்ளன.

துா்கை என்றழைக்கப்படும் கொற்றவை மற்றும் ஜேஷ்டா, தவ்வை என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பங்கள் பல்லவா் காலத்தைச் சோ்ந்தவை (கி.பி.7 - 8ஆம் நூற்றாண்டு). இவை 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை.

செல்லபிராட்டி கிராமம் பல்லவா் காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளற்கு ஆதரமாக இந்தச் சிற்பங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments