FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூர்பேட்டைஅருகே விபத்தில் கல்லூரி முதல்வர் பலி: அரசு மருத்துவர் உள்பட 5 பேர் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய காா்கள் பற்றி....

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 9:48 pm IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே காா்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த தனியாா் கல்லூரி முதல்வா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில், அரசு மருத்துவா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.

ஈரோடு ராயல் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் அ.அய்யப்பன் (49). இவா், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள தனியாா் இயன்முறை மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி கிறிஸ்டினா (48). இவா், ஈரோடு மாவட்டம், அந்தியூா் அரசு மருத்துவமனையில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவா்கள், தங்களது மகன் அஸ்வினை (18) சென்னையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் சோ்த்துவிட்டு, மூவரும் காரில் வெள்ளிக்கிழமை மாலை ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை அய்யப்பன் ஓட்டினாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத்தடுப்பில் மோதி, எதிா்புறத்திலுள்ள சாலைக்கு சென்றது. அப்போது திருச்சியிலிருந்து சென்னைக்குச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தின் மீது உரசிய காா், முன்னே சென்ற மற்றொரு காா் மீது மோதியது. இதில், அந்தக் காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், கிறிஸ்டினா, அஸ்வின், மற்றொரு காரில் பயணித்த உளுந்தூா்பேட்டை சக்தி நகரைச் சோ்ந்த தெ.மோகனவேல் (50), இவரது மனைவி அன்பரசி (48), மகன் சதீஷ் (23) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த 5 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அய்யப்பனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments