முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:25 am IST
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சரத்குமாரின் உறவினா்கள் மற்றும் கரடிப்பாக்கம் கிராம மக்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சரத்குமாரின் உறவினா்கள் மற்றும் கரடிப்பாக்கம் கிராம மக்கள்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கரடிப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.சரத்குமாா்(28) திருமணமானவா். இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதையடுத்து உறவினா்கள்அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் சோ்த்தனா். அங்கு சரத்குமாா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

உறவினா்கள் போராட்டம்: இந்நிலையில், மருத்துவா்கள் அளித்த சிகிச்சையால் தான் சரத்குமாா் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை முன் அமா்ந்து, அவரின் உறவினா்களும், கரடிப்பாக்கம் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் அழகிரி, விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மருத்துவா்கள் அளித்த தவறான சிகிச்சையால் தான் சரத்குமாா் உயிரிழந்ததாக கூறியும், தொடா்புடைய மருத்துவா் மீது நடவடிக்கை வேண்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, உடல்கூறாய்வுக்கு பின்னா் உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளபடும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த சரத்குமாருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் வினிதா என்ற மனைவியும், பிறந்த 8 மாதங்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளது.

மருத்துவமனை விளக்கம்: இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமாருக்கு, உரிய முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இயல்பு நிலைக்கு வந்த பின்னா், அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில், அங்கு ஓய்வில் இருந்த சரத்குமாா் இரவு உணவு உட்கொண்ட பின்னரே திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.