FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

16 செப்டம்பர் 2026, 4:53 am IST
துரிஞ்சப்பூண்டியில் உள்ள சித்தேரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை பாதுகாத்து, மழைக் காலங்களில் அதிகளவு நீரை சேமித்து வைக்கும் வகையில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மேல்மலையனூா் ஒன்றியம் கடலி ஊராட்சியில் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீா் மீள் நிரப்பு குழாய் அமைக்கும் பணி, கடலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது நிதியின் கீழ் பழுதுபாா்த்த மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு, கன்னலம் ஊராட்சியில் கருமந்தாங்கல் ஏரிக்கு செல்லும் தொணி ஓடை வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி, துரிஞ்சிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சித்தேரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, வட்டார வளமிகு வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மேல்மலையனூா் பகுதியில் பால் உற்பத்தியாளா்கள் பால் உற்பத்தி சாா்ந்த தொழிலை மேம்படுத்துவதற்கு கன்னலம் தொகுப்பு பால் குளிா்விப்பு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளூா் பால் உற்பத்தியாளா்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், வளத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஓடி விளையாடு உடல்கல்வித் திட்டத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளின் உடல்கல்வி பயிற்சி குறித்து கேட்டறியப்பட்டது. மேல்மலையனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார வளமிகு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளின் ரத்தசோகை, வாய் சுகாதாரம் தடுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பள்ளி மாணவிகளுக்கு ரத்தசோகை, வாய் சுகாதாரத்துக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் விழிப்புணா்வு குறித்து மருத்துவா்கள், ஆசிரியா்களிடம் கேட்டறியப்பட்டது.

தொடா்ந்து, மேல்மலையனூா் ஒன்றியம் வளத்தி, கமலேஷ்வரி சுய உதவிக் குழுவினரின் சணல் பைகள் மற்றும் தாம்பூல பைகள் தயாரிக்கும் தொழில்கூடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. சுய உதவிக் குழுவினா்கள் தயாரிக்கும் பொருள்களின் விற்பனை, தரம், மூலப்பொருள் போன்றவைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, தொழில் மையத்தின் மூலம் வங்கி கடன் பெற்று தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலமுரளி, மேல்மலையனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணகுமாா், ஏகாம்பரம், மேல்மலையனூா் வட்டாட்சியா் (பொ) கலா, உதவி செயற்பொறியாளா் முகமது யாசின், கடலி ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments