எந்தெந்தக் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தெரியாமல் சிக்கலில் தவித்து வருகிறது பாஜக
பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தார். ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் சென்னைக்கு வியாழக்கிழமை வந்தார். ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
அலுவல்பூர்வமான கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதால், கூட்டணி குறித்து அடுத்த வாரத்தில் பேசப்படும் என்று அவர் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் நீடிப்பதாகவும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாஜக தமிழகத் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளராக அன்புமணியை களம் இறக்கி, பாமகவும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறது. தேமுதிகவும் தனது நிலையை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரகாஷ் ஜாவடேகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்தார். அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியபோதும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு புதன் அல்லது வியாழக்கிழமையில் மீண்டும் சென்னை வருவதாக பிரகாஷ் ஜாவடேகர் கூறியிருந்தார்.
மீண்டும் வருகை: இந்த நிலையில், ஜாவடேகர் சென்னைக்கு வியாழக்கிழமை காலை வந்தார். இந்த நிலையில், திமுக-தேமுதிக இடையே கூட்டணி அமைந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது இந்த திடீர் வருகை பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், எந்தக் கட்சிகளுடனும் அதிகாரப்பூர்வமாக அவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இருப்பினும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற துறை ரீதியான ஆலோசனைக் கூட்டத்தில், அவர் பங்கேற்றார். இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
துறை ரீதியான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்தேன். எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவில்லை. அடுத்த வாரம் கூட்டணி தொடர்பான சந்திப்புகள் இருக்கும் என்றார்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், "தேமுதிகவிடம் இருந்து எந்த நம்பிக்கையூட்டும் தகவல் வரவில்லை. பாஜக கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது' என்றார்.
தவிக்கும் பாஜக? விஜயகாந்தை ஜாவடேகர் சந்தித்துப் பேசுவார் என்ற கருத்து நிலவியது. ஆனால், விஜயகாந்த் தனது ரிஷிவந்தியம் தொகுதிக்குச் சென்று விட்டார். இதனால், இருவரின் சந்திப்பு நிகழவில்லை.
இதனால், திமுக-தேமுதிக கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சிகள் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேமுதிக உறுதியான கருத்தைத் தெரிவிக்காத நிலையில், எந்தெந்தக் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தெரியாமல் சிக்கலில் தவித்து வருகிறது பாஜக.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.