FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குனர் ஆடை அவிழ்க்கச் சொன்னால் அதைக்கூட படைப்பூக்கம் என்று மழுப்பும் சினிமா உலகம்!

தனுஸ்ரீக்கு இப்படியொரு தர்ம சங்கடம் நேர்ந்த போது அப்போது செட்டில் உடன் இருந்த நடிகர்களான சுனில் ஷெட்டி மற்றும் இர்ஃபான்கான் இருவரும் நடிகைக்காகப் பரிந்து பேசி அவருக்கு பாதுகாப்பு அளித்தார்கள்.

Updated On : 29 செப்டம்பர் 2018, 11:53 am IST
பகிர்:

முன்னாள் மிஸ் இந்தியாவும் பிரபல பாலிவுட் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் காலா வில்லன் நானா படேகர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் ஒன்றை எழுப்பினார். தான் அவருடன் நடித்த திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் நானா படேகர் தன் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகித்ததாக தனுஸ்ரீ குற்றம் சாட்டியதுடன். அப்படிப் பட்ட நடிகருக்கு தங்கள் திரைப்படங்களில் வாய்ப்புக் கொடுத்து அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக பிரபல பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்களே, இது நியாயமா?! என்று கேள்வி எழுப்பியிருந்தார். தனுஸ்ரீ தத்தாவின் இந்தக் குற்றச்சாட்டை அப்போது படப்பிடிப்பில் இருந்த பிரபல பத்திரிகையாளப் பெண்ணொருவரும் நேரில் கண்டதாக ஊடகங்களில் சாட்சியம் அளித்திருந்தார். இவ்விஷயம் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்க. இன்று தனுஸ்ரீ தத்தா மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அது என்னவென்றால். 2005 ஆம் ஆண்டில் தான் ‘இயக்குனர் விவேக் அக்னிகோத்தரியின் சாக்லேட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் ஹீரோ இர்ஃபான்கானின் முகத்தில் அந்தக் காட்சிக்குத் தேவையான பாவனைகளைப் பெற வேண்டி நாயகியான தன்னை ஆடையை அவிழ்த்து விட்டு நடனமாடச் சொல்லி வற்புறுத்தினார்.’ என்று ஒரு புதுக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் தனுஸ்ரீ. இந்த விவேக் அக்னி கோத்தரி வேறு யாருமல்ல. பத்மாவத் திரைப்பட விவகாரத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர் குறித்து ட்விட்டரில் படு காட்டமான விமர்சனத்தை முன் வைத்து பரபரப்பைக் கிளப்பியர் தான்.

இதைப் பற்றி மேலும் பேசுகையில் தனுஸ்ரீ கூறியதாவது, அந்தக் காட்சியில் எனக்கு வேலையேதும் இல்லை. அது எனக்கான காட்சியும் அல்ல. நடிகரின் குளோஸ் அப் ஷாட். அதில் இயக்குனருக்குத் தேவையான முகபாவனையைப் பெற நடிகரை ஏதாவது ஒன்றின் மீது கவனத்தைக் குவிக்கச் சொல்வது வழக்கம். ஆனால், இந்த இயக்குனர் விஷமத்தனமாக, என்னை ஆடை அவிழ்த்து விட்டு நடனமாடச் சொல்லி நடிகரின் கவனத்தைக் குவிக்கச் சொன்னார். அவரது வினோதமான இந்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என்று கூறி இருக்கிறார் தனுஸ்ரீ. 

தனுஸ்ரீக்கு இப்படியொரு தர்ம சங்கடம் நேர்ந்த போது அப்போது செட்டில் உடன் இருந்த நடிகர்களான சுனில் ஷெட்டி மற்றும் இர்ஃபான்கான் இருவரும் நடிகைக்காகப் பரிந்து பேசி அவருக்கு பாதுகாப்பு அளித்தார்கள். ஆனாலும் ஒரு இயக்குனர் தனது படைப்பாற்றலைத் திரையில் கொண்டு வருவதற்காக நடிகையிடம் என்ன வேண்டுமானாலும் வேண்டுகோள் வைப்பதா? இது பாலியல் வன்முறை ஆகாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தனுஸ்ரீ.

Advertisement

Advertisement

சினிமா உலகில் எல்லோருமே இவரைப்போல மட்டமானவர்கள் இல்லை. சுனில் ஷெட்டி, இர்ஃபான் கான் போல நெருக்கடியான சந்தர்பங்களில் நடிகைகளுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பேசவும் சில நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள் என்றும் தனுஸ்ரீ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments