ஹனிமூன் ட்வீட்டுக்காக நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட செளந்தர்யா!
விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது
நடிகரும் தொழிலதிபருமான விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இத்திருமணத்தில் ஏராளமான திரைப் பிரபலங்களும் முக்கியப் புள்ளிகளும் கலந்து கொண்டனர். தற்போது இத்தம்பதியர் ஐஸ்லாந்தில் தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர், செளந்தர்யா கொண்டாட்ட மனநிலையில் சில புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டார். புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நாடே கொந்தளித்து இருக்கின்ற நிலையில் செளந்தர்யாவின் புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் பலவகையான கருத்துக்களை வெளியிட்டனர். அங்கு 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர், நீங்கள் தயவு செய்து உங்கள் மகிழ்ச்சியை இப்படி வெளிப்படையாக பதிவிடாதீர்கள், உடனடியாக இந்தப் புகைப்படங்களை நீக்குங்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
சிலர் வசைமொழியில் திட்டியும் இருந்தனர். தனது அடுத்த ட்வீட்டில் செளந்தர்யா மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி என்று பதிவிட்டிருந்தாலும், ஹனிமூன் படங்களை நீக்கவில்லை. ஹனிமூன் புகைப்படத்தில் 'மிஸ்ஸிங் வேத்’ என்று எழுதியது வேறு நெட்டிசன்களின் கோபத்தை அதிகரித்தது. எனினும் சிலர் வாழ்த்துகள் சகோதரி என்று செளந்தர்யாவை வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.