செய்திகள்

அண்ணன் அருண் விஜய்க்கு தங்கை வனிதாவின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

சரோஜினி

அண்ணன் அருண் விஜய்க்கு தங்கை வனிதாவின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

வனிதா விஜயகுமார்.. இன்று தமிழகத்தில் சிறு குழந்தைக்கும் கூட நன்கு அறிமுகமான பெயர். அவர் நாயகியாக அறிமுகமானது அவரை எத்தனை பேருக்குத் தெரியுமோ?! ஆனால், இன்று தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்கத் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்றடைந்து விட்டது அவர் குறித்த அறிமுகம். உபயம் பிக்பாஸ் சீசன் -3. இந்த ரியாலிட்டி ஷோவைப் பொருத்தவரை வனிதாவுக்கு எதிர்மறை பிரபல்யம் தான் அதிகமும் கிடைத்தது. ஆயினும், எப்படியோ பார்வையாளர்களின் மனதில் நின்று விட்டார். சிலர் அந்தப் போட்டியில் அவரது எதிர்த்தாடும் திறனை ரசித்தார்கள் என்று கூட கேள்வி. அது தான் யூடியூப் முழுதும் நிறைந்து கிடைக்கிறதே வனிதா குறித்த பிக்பாஸ் சீசன் 3 விடியோக்கள். ஆக, வனிதா விஜயகுமார் என்றாலே எப்போதும் சர்ச்சைகளும் கூடவே பயணிக்கும் என்கிற அளவுக்கு மிகுந்த போரட்ட குணம் கொண்ட பெண்ணாகவே அவர் திகழ்ந்து வருகிறார். 

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் அவரது இரண்டாவது மனைவியும், பிரபல நடிகையுமான மஞ்சுளாவின் மூத்த மகளே வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக  ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.  பிறகு மாணிக்கம் உட்பட சில படங்களில் நாயகியாக நடித்து விட்டு சின்னத்திரை மற்றும் அவ்வப்போது பெரிய திரையிலும் நடித்துக் கொண்டிருந்தவருமான நடிகர் ஆகாஷைக் காதல் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டே காணாமல் போனார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்றொரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு சட்டப்பூர்வமாக வனிதா பிரிந்து சென்றார். 

பின்னர் தனது தாய்வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராஜன் என்பவருடன் வனிதாவுக்கு இரண்டாம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தை விஜயகுமார் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் கணவர் மற்றும் மகளுடன் ஆஸ்திரேலியாவில் சில காலம் வாழ்ந்து வந்தார் வனிதா. பின்னர் மீண்டும் சென்னை திரும்பியவருக்கு தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மூத்த மனைவியின் மகனும் நடிகருமான அருண் விஜயுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அது ஊரே சிரிக்கும்படியாக ஊடகங்களில் பதிவானது. அப்போது உயிருடனிருந்த நடிகை மஞ்சுளா.. வனிதாவைப் போன்ற ஒரு ராட்சஸியை மகளாகப் பெற்றதற்காக தான் மிக வருந்துவதாக ஊடகங்களில் பேட்டியளித்தார். இதெல்லாம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க திடீரென நடிகை மஞ்சுளா உடல்நலம் குன்றி கட்டிலில் இருந்து கீழே விழுந்து மரணத்தை தழுவ..  அவரது இறுதிச் சடங்கில் ஒட்டுமொத்த விஜயகுமார் குடும்பமும் வனிதாவை தனிமைப்படுத்தி அவர் மீது பாராமுகம் காட்டியதையும் மீடியாக்கள் ஒளிபரப்பின. 

இதற்குப் பிறகு வனிதாவின் வாழ்வில் மேலுமொரு ட்விஸ்ட்.. தன் அம்மாவின் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டை விட்டு தன்னை தன் தந்தை விஜயகுமாரும், சகோதரர் அருண் விஜயும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். இதற்கு காவல்துறையினரும் உடந்தை என பகிரங்கமாக குற்றம் சாட்டி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்தார் வனிதா. வனிதா குறித்த எந்தக் கேள்விக்கும் விஜயகுமார் குடும்பம் பெரிதாக விளக்கம் அளிக்காமல் மெளனம் சாதித்தது. மொத்தக் குடும்பமும் வனிதாவின் செயல்களால் அவரை ஒதுக்கி வைத்தாற் போல நடந்து கொண்டது. ஆனால், வனிதா மட்டும் ஒன்வுமன் ஆர்மியாக தனக்கான நியாயங்களுக்காக தனித்துப் போராடிக் கொண்டே இருந்தார். ஆம், அவர் சளைக்காமல் யூ டியூப் சேனல்களுக்கும், ஊடகங்களுக்கும் தனக்கு தனது சொந்தக் குடும்பத்தால் நிகழ்த்தப்பட்ட அநியாயங்கள் அத்தனை குறித்தும் பகிரங்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில் தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராகக் கலந்து கொள்ள வனிதாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. போட்டியாளராக வனிதா பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போது அவரது முன்னாள் இரண்டாம் கணவரான ஆனந்தராஜ்.. வனிதாவுடன் இருக்கும் தனது மகளை மீட்டுத்தருமாறு ஆந்திர காவல்துறையினரை அணுகி அவர்களை பிக்பாஸ் வீட்டினுள் நுழைய வைத்தார். அந்த வழக்கு பிசுபிசுத்துப் போனது. மகள், தானே விரும்பி தன் அம்மாவுடன் வசிக்கவே ஆசைப்படுவதாகக் கூற ஆந்திர மகிளா காவல்துறையினர் வெறும் திரும்பிச் சென்றனர். 

இப்படி ஒரு பிரபல நடிகர் குடும்பத்தில் பிறந்து இன்று வனிதா வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முற்றிலும் சிக்கலும், சவாலும் நிறைந்ததாகவே சென்று கொண்டிருக்கிறது. 

இப்பொதென்ன கதை என்றால்..

அடங்க மறுக்கும் இயல்பு கொண்ட தனித்தியங்கும் ஆற்றல் மிக்க பெண்ணாகத் தன்னை பொதுவெளியில் காட்டிக் கொள்ளும் வனிதாவுக்குள்ளும் ஒரு நெகிழ்வான மனம் இருக்கிறது என்பது தான்.

ஆம், அவரது சகோதரரும் நடிகருமான அருண் விஜய்க்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு வனிதா, தனது ட்விட்டர் தளத்தில் உருக்கமான வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

நடிகரும் அண்ணனுமான அருண் விஜயின் பிறந்தநாளுக்கு வனிதாவின் வாழ்த்து ட்வீட்...

தனது ட்விட்டர் வாழ்த்தில் வனிதா பதிவு செய்துள்ள வாழ்த்தின் சாராம்சம், சகோதரனே, நமக்குள் மனதளவில் பல வித்தியாசங்கள் இருக்கலாம். அவை அனைத்தும் பேசினால் தீர்வு காணக்கூடிய விஷயங்களே. ஒரு குடும்பம் ஒரே ரத்தம் ஒரே வாழ்க்கை. இதில் நாம் வெவ்வேறு விதத்தில் நமது பயணங்களில் ஆழ்ந்திருந்தாலும்  இதை நாம் ஒன்றாகத் துவங்கினோம் என்பதை மறந்து விட முடியாது. நாம் நமது குடும்பத்தைப் பெருமைப்படுத்த வேண்டும். # HBDArunVijay நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு சகோதரனாக நான் உங்களை விரும்புகிறேன்//

வனிதாவின் இந்த நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவு சொந்தக் குடும்பத்தின் மீதான அவரது தேடலையே காட்டுகிறது. விஜயகுமார் குடும்பம் இதற்கு எதிர்வினையாற்றுமா? வனிதாவின் மனதிற்கு ஆறுதல் அளிக்குமா என்பதையும் வனிதாவே பின்வரும் காலங்களில் எங்கேனும் பதிவு செய்யலாம்.

Image Courtesy: Indiaglitz
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT