சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துக்குத் தடையா?: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. டிசம்பர் 20 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இன்று செய்திகள் வெளியான. இதற்கு ஹீரோ படத்தைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹீரோ படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது, வேறு எந்தப் பட நிறுவனமும் அல்ல. ஹீரோ படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறான செய்தியாகும். 24 ஏ.எம். பட நிறுவனம் ஹீரோ படத்தைத் தயாரிப்பதாகவும் செய்திகளில் கூறப்பட்டுள்ளன. ஹீரோ படத்தைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்று 24 ஏ.எம். பட நிறுவனமே முன்பு கூறியுள்ளது.
Advertisement
Advertisement
கே.ஜே.ஆர். பட நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக ஹீரோ படப் பெயரை, அதன் லோகோவைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஹீரோ படம் தொடர்பாக 24 ஏ.எம். மற்றும் டி.எஸ்.ஆர். நிறுவனங்களுடன் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஹீரோ படப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிராகச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.