முகப்பு
செய்திகள்

'நான் வாழ விரும்பவில்லை' - விபத்து குறித்து நடிகை யாஷிகா உருக்கம்

விபத்தில் தனது தோழி பழியானது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

விபத்தில் தனது தோழி பழியானது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

கடந்த மாதம் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடிகை யாஷிகா ஆனந்த் அவரது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில், சூளேரிக்காடு என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். அதிவேகமாக கார் ஓட்டி வந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகை யாஷிகா பலத்த காயத்துடனும், அவரது இரண்டு ஆண் நண்பர்கள் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா பெரிதும் விமர்சிக்கப்பட்டார். 

நடிகை யாஷிகாவின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருப்பதால், அவருக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருப்பதாக அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் முதன்முதலாக இந்த விபத்துக்கு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் திறந்துள்ளார். 

அந்தப் பதிவில், ''நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் வாழ நேரிட்டுள்ளது. என்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது என் தோழியை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டதற்காக கடவுளைப் பழிப்பதா? என்று தெரியவில்லை. நான் ஒவ்வொரு நொடியும் நீ இல்லாதது குறித்து வருத்தப்படுகிறேன் பவானி. நீ என்னை எப்பொழுதும் மன்னிக்க மாட்டாய் என எனக்குத் தெரியும். உன் ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்ப வர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன். உன் குடும்பத்தார் என்னை மன்னிப்பார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

என்னுடைய பிறந்த நாளை நான் கொண்டாடப்போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் என் பிறந்த நாளை கொண்டாடாதீர்கள். என் தோழியின் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள். கடவுள் அவர்களுக்கு அதிக வல்லமை அளிக்கட்டும். உன் மரணத்துக்கு நான் காரணமாக இருப்பேன் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் திரும்ப நலம் பெற்று வருவேன். நான் உண்மையில் வாழ விரும்பவில்லை. ஆனால் நீங்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளீர்கள்''  என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.