தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மாறன் ? - முதல் பார்வை போஸ்டர் இதோ
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாறன் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாறன்' பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
போஸ்டரில் தனுஷ் தனது கையால் ஒருவரின் தலையை கண்ணாடியில் மோத, அந்தக் கண்ணாடி சிதறுவதுபோல் உள்ளது. தனுஷ் முறைத்துக்கொண்டிருக்க, பல துகள்களாக சிதறிய கண்ணாடியில் அவரது பிம்பம் பிரதிபலிக்கிறது. இதனையடுத்து இந்தப் படம் சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு மாறன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் பெயரும் இந்தப் படத்தில் மாறனாக இருக்கலாம். பாடலாசிரியர் விவேக் இந்தப் படத்தில் கார்த்திக் நரேனுடன் இணைந்து கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான அசுரன் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இந்தப் படத்தின் இசை குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் கார்த்திக் நரனின் முதல் படமான துருவங்கள் பதினாறு படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் அரவிந்த் சாமியை வைத்து இயக்கிய 'நரகாசூரன்' படம் இன்னும் வெளியாகவில்லை. நடிகர்கள் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து அவர் இயக்கிய 'மாஃபியா' ரசிகர்களை கவரவில்லை. இந்த நிலையில் மாறன் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தனுஷ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் வகையில் மாறன் இருக்கும் என கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.