சூர்யாவை அடுத்து விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல மலையாள இயக்குநர்?
பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் அங்கமாலி டையரிஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கேரள அரசின் மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மம்மூட்டி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ தமிழில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
தற்போது, மோகன்லாலுடன் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தினை இயக்கி வருகிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் கமல் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
லிஜோ மோகன்லால் படத்திற்குப் பிறகு தமிழில் சூர்யாவை வைத்து எடுப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஒரு நேர்காணலில் லிஜோ ஜோஸ் அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து படமெடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து இந்தாண்டு பல படங்கள் வெளிவர உள்ளது. தற்போது ஜவான் எனும் ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். விடுதலை, மேரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்கிஸ், மும்பைக்கர், ஃபார்ஸி (இணைய தொடர்) ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.