கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் நடிகராவும் அசத்தி வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்குப் பின் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஏஜிஎஸ்-இன் 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. இதில் நானும் சீனியருமான அஸ்வத் மாரிமுத்தும் இனைந்து படம் எடுக்க வேண்டுமென 10 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்தோம். அவர்தான் என்னை கேமிராவில் படம் பிடித்து அழகாக இருக்கிறாய் என்றார் என பிரதீப் கூறியுள்ளார்.
விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுமென பிரதீப் இந்த விடியோவில் கூறியுள்ளார்.