FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மகள் எனக் கூறிய இயக்குநரால் பாலியல் வன்கொடுமை: நடிகை செளமியா

தமிழ் இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மலையாள நடிகை செளமியா.

Updated On : 5 செப்டம்பர் 2024, 4:24 pm IST
நடிகை செளமியா
பகிர்:

மகள் எனக் கூறிய இயக்குநரே, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை செளமியா குற்றம் சாட்டியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த இயக்குநரின் பெயரைக் குறிப்பிடாத செளமியா, சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகாரளிக்கும்போது முழு விவரங்களையும் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரைத் துறையில் பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மலையாள நடிகையான செளமியா, தமிழ் இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை வெளியான பிறகு, முதல்முறையாக தமிழ் இயக்குநர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது இதுவே முதல்முறை.

வாய்ப்பு வழங்கி பாலியல் வன்கொடுமை

1990களில் மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை செளமியா. ஒருசில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆங்கில ஊடகத்தில் இது தொடர்பாக பேசிய அவர், கல்லூரி படிக்கும்போது நாடகக் கலைஞர்களுடன் பழகி வந்ததாகவும், அதன்மூலம் இயக்குநர் ஒருவர் தன்னை படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி தனது தந்தையிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த செளமியா தெரிவித்ததாவது, ''படத்தில் நடிக்கவைக்க பெரிய தொகையை இயக்குநர் சார்பில் என் தந்தையிடம் வழங்கப்பட்டதால், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிப்புப் பயிற்சியில் பெருமளவு தொகை செலவிடப்பட்டதால், படத்திலிருந்து விலக முடியவில்லை.

இயக்குநரும், அவரின் மனைவியும் தன்னை மிகவும் கனிவுடன் நடத்தினர். அவர்கள் இல்லத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள். அங்கு உணவு, பழரசம் போன்றவை வழங்கி அவரின் மனைவி என்னை கவனித்துக்கொள்வார்.

ஒருநாள், அவரின் மனைவி வீட்டில் இல்லாதபோது இயக்குநர் என்னருகில் வந்து, மகளைப் போன்று எண்ணுவதாகக் குறிப்பிட்டு எனக்கு முத்தமிட்டார். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவறிழைத்தவள் போன்ற உணர்வை அந்த நாள் எனக்கு ஏற்படுத்தியது. இது குறித்து நண்பர்களிடம் கூறவும் நான் தயங்கினேன்'' எனக் குறிப்பிட்டார்.

ஓராண்டு இப்படியே நகர்ந்ததாகவும், ஒத்திகைக்காக இயக்குநரின் வீட்டிற்கு அவ்வபோது செல்ல வேண்டியிருந்ததாகவும் செளமியா குறிப்பிட்டார். எனினும் நாளுக்குநாள் தன்னை அணுகும்போக்கு மாறி, முழுவதுமாக தன்மீது அவரை திணித்ததாகவும் தெரிவித்தார்.

''மகளாக தன்னை நினைப்பதாகக் கூறியவர், என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். சொல்லமுடியாத பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டேன். என் மனநிலையை முழுவதுமாக சிதைத்துவிட்டார். அப்படம் முடியும் வரை பாலியல் அடிமை போன்று நடத்தப்பட்டதாகவே உணர்ந்தேன். இதிலிருந்து மீண்டுவர எனக்கு 30 ஆண்டுகள் கடந்துவிட்டது'' என செளமியா குறிப்பிட்டார்.

பாதுகாப்பு கருதி பொதுவெளியில் இயக்குநரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகாரளிக்கும்போது முழு விவரங்களை அளிக்கவுள்ளதாகவும் செளமியா தெரிவித்தார்.

மேலும், திரைத் துறையில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாக முன்வந்து தங்களின் அனுபவங்களைப் புகார்களாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும் செளமியா கேட்டுக்கொண்டார்.

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம்

மலையாளத் திரைத் துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் இதில் திரைத் துறையைச் சேர்ந்த மிகப்பெரும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து மலையாளத் திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என கோரப்பட்டது. பாலியல் புகார்களை விசாரிக்க கேரள காவல் துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மலையாளத் திரைத் துறையில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்தன.

கேரள மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் சித்திக் ஆகியோா் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து தங்கள் பதவிகளை அவர்கள் ராஜிநாமா செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments