FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சௌதியில் பன்றி இறைச்சி உணவுக் கடை தொடங்குகிறேனா? பாடகர் வேடன் விளக்கம்!

பாடகர் வேடன் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்...

13 வினாடிகள் முன்பு
ராப் பாடகர் வேடன் - (கோப்புப் படம்)
பகிர்:

பிரபல பாடகர் வேடன் தன்னைக் குறித்து பரவும் தகவலுக்கு விளக்கம் அளித்தார்.

மலையாளத் சினிமா மற்றும் சுயாதீன இசைத்துறையில் பிரபலமாக இருப்பவர் வேடன். மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இவர் பாடிய குதந்த்ரம் பாடல் பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் பைசன், டிசி படங்களில் பாடினார்.

சில நாள்களுக்கு முன் வேடன் வளைகுடா நாட்டில் பன்றி இறைச்சியுடன் கூடிய உணவகத்தைத் தொடங்கவுள்ளார் என வதந்திகள் பரவின. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்ததால் கேள்வியெழுப்பி வந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வேடன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுவாக தனிப்பட்ட முறையில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை. சௌதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. இது தொடர்பாக எந்த நிறுவனத்துடனும் கூட்டாண்மை, விண்ணப்பம் அல்லது தொழில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

நான் சௌதி அரேபியாவிற்கு செல்வது ஒரு நிகழ்ச்சிக் கலைஞர் ஆக, அங்குள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரிலேயே நடைபெறுகிறது.

என்னை அழைக்கும் ஒவ்வொரு நாட்டின் சட்டங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை நான் எப்போதும் மதித்து வருகிறேன். அதற்கு எதிரான தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு கருத்தையோ செயலையோ நான் மேற்கொண்டதில்லை.

மேலும், இது முதல் முறையாக நடைபெறும் சம்பவமும் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் எனது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் வரவேற்பும் அதிகரித்து வரும் நிலையில், அதே காலகட்டங்களில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவது தற்செயலான ஒன்று என்று நான் கருதவில்லை. எனது கலைப் பயணத்தையும், என்னை நம்பும் பார்வையாளர்களுடனான உறவையும், சர்வதேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனான எனது தொழில்முறை உறவுகளையும் பாதிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே இதை பார்க்கிறேன்.

நான் எங்கிருந்து தொடங்கினேன் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எந்த விதமான பின்னணியும் இல்லாமல், வாய்ப்புகள் கிடைக்காத சூழலிலிருந்து, என்னை நம்பிய மனிதர்களின் ஆதரவால் மட்டுமே இன்று நான் இருக்கும் இடத்தை அடைந்துள்ளேன். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பொறுப்பும், அதே நேரத்தில் எனது மிகப்பெரிய பலமும் ஆகும்.

ஒரு கலைஞன் தனது சொந்த முயற்சியால் கீழ்மட்டத்திலிருந்து உயர்ந்து வருவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற திட்டமிட்ட பிரச்சாரங்களால் எனது கலைப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.

இந்த தவறான தகவல்களை பரப்பிய சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்களை எங்கள் குழு சேகரித்து பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருபவர்களிடம் எனது அன்பான வேண்டுகோள்: எந்த தகவலையும் மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன்பு, அதன் உண்மைத் தன்மையை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக என்னை நேரடியாகத் தொடர்புகொண்டு விசாரித்த அனைவருக்கும், உண்மையை புரிந்துகொண்டு எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இதுபோன்ற தவறான பிரசாரங்கள் எனது இசையையோ, எனது கலைப் பயணத்தையோ ஒருபோதும் தடுக்காது.

எனது நிகழ்ச்சிகளில் சந்திப்போம்.

ஜெய் பீம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Popular singer Vedan clarified the information circulating about him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments