சிரஞ்சீவியின் படத்தைப் பார்த்து விவாகரத்து முடிவை கைவிட்ட தம்பதியினர்!
நடிகர் சிரஞ்சீவி தனது திரைப்படத்தின் தாக்கம் குறித்து பேசியதாவது...
நடிகர் சிரஞ்சீவி தனது மன ஷங்கர வர பிரசாத் காரு எனும் திரைப்படத்தினைப் பார்த்த தம்பதியினர் பிரிவை விடுத்து மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்ததாகக் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து சமூக வலைதளத்தில் சிலரிடம் ஆதரவும் சிலரிடம் கிண்டலும் பெருகி வருகின்றன.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையாமல் இருந்தன.
Advertisement
இந்தக் குறையை அனில் ரவிபுடி இயக்கியுள்ள மன ஷங்கர வர பிரசாத் காரு எனும் திரைப்படம் போக்கியுள்ளது.
இந்தப் படம் இதுவரை ரூ.190 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இந்தப் படம் குறித்து சிரஞ்சீவி பேசுகையில், “இந்தப் படத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது எனில், இது நிஜமாகவே நடந்த விஷயம் என எனக்குச் சிலர் இதை அனுப்பினார்கள்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்துவிடலாம் என நினைத்திருந்த ஒரு தம்பதியினர் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்துள்ளனர். காரணம் அம்மா சென்டிமென்ட். மிகுந்த அற்புதமாக இது பற்றிய காட்சிகளையும் வசனங்களையும் படத்தில் இயக்குநர் எழுதியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
சிரஞ்சீவியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும் கிண்டலும் பெருகி வருகின்றன.