எகோவில் மலாத்தியாக நடித்தவர் பின்னணி!
எகோவில் நடித்த பியானா மோனின் குறித்து...
செய்திகள்எகோவில் மலாத்தியாக நடித்தவர் பின்னணி!
எகோவில் நடித்த பியானா மோனின் குறித்து...
எகோ திரைப்படத்தில் மலாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்துள்ளார் பியானா மோனின்.
இயக்குநர் தின்ஜித் அய்யதன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தீப் பிரதீப், பியானா மோமின், நரேன், வினீத், சௌரப் சச்தேவா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் “எகோ”.
2025 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்தால் எகோவுக்கு பாராட்டுகள் குவிந்தன. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பிறகு இந்தியளவில் கவனங்களும் கிடைத்து வருகின்றன.
இப்படத்தில், மலேசியாவிலிருந்து கேரளம் வந்த மலாத்தி என்கிற கதாபாத்திரத்தில் பியானா மோனின் என்பவர் நடித்திருந்தார். கிளைமேக்ஸ் காட்சியில் தொலைநோக்கியுடன் பாறையில் அமர்ந்து சந்தீப்புடன் இவர் பேசும் வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, பியானாவின் நடிப்பும் கதைக்கு பலமாக அமைந்திருந்தது.
இதனால், பலரும் பியானா மோனின் யார் எனத் தேடத் துவங்கினார். 70 வயதான பியானா பிறந்து வளர்ந்து எல்லாம் மேகாலயாவில் தானாம். அங்கு, ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சில ஆண்டுகளுக்கு முன் குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஆனால், அது வெளியாகவில்லை. இருப்பினும், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த எகோ திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் இருவரும் பியானாவிடம் தங்கள் கதைக்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் எனக் கூறியிருக்கின்றனர்.
நடிப்பு அனுபவம் இல்லாத பியானாவுக்கு முதலில் தயக்கம் இருந்தாலும், பின் ஒப்புக்கொண்டிருக்கிறார். எந்தொரு மலையாள சினிமாவையும் பார்க்கவில்லை என்றும், ஒரு மலையாள வார்த்தைகூட தெரியாது என்றும் கூறும் பியானா நடிக்கும்போது சந்தோஷமாக இருந்தேன் என்கிறார்.
படப்பிடிப்புக்கு ஒருமாதம் முன்பே படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று படத்திற்குத் தேவையான மலையாள மொழியைக் கற்றுள்ளார். மேலும், எகோவில் நாய்களை வைத்தே நிறைய நாள்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் தனக்கு அதனால் எந்த அச்சமும் இல்லை என்றும் தானும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 4 நாய்களை வளர்த்தி வருவதாகவும் பியானா தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படம் என்றாலும் மலையாள சினிமாவின் முக்கியமான திரைப்படமொன்றில் பியானா இடம்பெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.