முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? ஜன நாயகன் - திரை விமர்சனம்!
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் திரை விமர்சனம்....
முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக வெளியாகியுள்ளது ஜன நாயகன். மக்களுக்கான நாயகன், மக்களில் ஒரு நாயகன்... எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கதை என்ன? என்கிற கேள்விக்கு சில மாதங்களுக்கு முன்பே பதில் தெரிந்திருக்கும். படம் இறுதிக்கட்டத்தை அடைந்தபோதே இது தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்பது உறுதியானது. ஆனால், அந்த மாறுதல்கள் உண்டு; இந்த மாறுதல்கள் உண்டு என விளக்கங்களும் வெளியாகின. இப்போது திரைப்படம் வெளியாகிவிட்டது. ஜன நாயகன் பகவந்த் கேசரின் 80 சதவீத ரீமேக். மீதமுள்ள படத்திற்கான கதையை வினோத் முதல்வர் விஜய்க்கான அரசியல், மக்கள் நலன் குறித்த பார்வை ஆகியவற்றைக் கொண்டு எழுதியிருக்கிறார்.
படத்தின் தொடக்கக் காட்சியிலேயெ சிறைச்சாலையிலிருக்கும் தளபதி வெற்றி கொண்டான் (முதல்வர் விஜய்) அதிரடியாக சண்டையிட்டு அறிமுகமாகிறார். அவர் யாரென்று தெரிந்துகொண்ட சிறைக்காவல் அதிகாரி நட்புடன் பழகுகிறார். அவரின் மகள் (விஜி - மமிதா பைஜூ) சூப்பர்மேன் என தளபதியுடன் நெருக்கமாக, ஒருகட்டத்தில் விஜியின் அப்பா விபத்தில் இறக்கிறார். குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தளபதியிடம் வருகிறது. சித்தப்பா முறையில் மமிதா கதாபாத்திரத்தைக் பாதுகாப்பாக வளர்க்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் மமிதா, தளபதியிடமிருந்து விலக நினைக்கிறார். அப்போது, தளபதி வெற்றி கொண்டான் யார்? என்கிற பிளாஷ்பேக் வருகிறது. அந்தக் கதை என்ன? ராணுவத்தில் மமிதாவைச் சேர்க்க வேண்டும் என தளபதி ஆசைப்படுவது எதனால்? என்கிற கதையில் பெண்களிடம் இருக்க வேண்டிய தைரியம், உறுதி, எந்த ஆண்களுக்கும் அவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற புரிதலைக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய்யே இப்படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டதற்கு முதல் காரணம், கதை முழுவதும் பெண்களின் வலிமையையும் தைரியத்தையும் பேசுகிறது. ஜன நாயகன் இறுதிவரை அந்த வேகத்தைக் குறைக்காத காட்சிகளாலேயே நிறைந்திருக்கிறது. கண்ணகி ஊரில் நீதிக்காக போராடும் பெண், பயத்திலிருந்து வெளிவரும் போது ஒரு பெண் அசாதாரணமாக மாறிவிடுகிறாள், பெண் குழந்தைகள் மீதான உடல் தொடுகைகள் குறித்த வெளிப்படையான பேச்சு என ஜன நாயகன் நாயக பிம்பத்திற்கான கதை என்பதைக் கடந்து வலுவான, பேசப்பட வேண்டிய விஷயங்களைப் பேசுகிறது.
ஆரம்பத்தில் யார் இந்தத் தளபதி வெற்றி கொண்டான்? என்கிற கேள்விகள் ஓரமாக இருந்துக்கொண்டே இருக்கும்படி செய்து இடைவேளையில், ‘ராவண மகன்டா’ பாடலுடன் சண்டைக் காட்சிகள் வருவது வரை முதல் பாதி அழுத்தமாக இல்லை. இரண்டாம் பாதியில் அட்டகாசமான சிஜி வேலைப்பாடுகளுடன் கூடிய கிளைமேக்ஸ் உள்பட சில சுவாரஸ்யமானக் காட்சிகளால் ஒகே ரகத்துடன் கதை நிறைவடைகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் கமர்சியல் திரைப்படங்களை நேர்த்தியாக இயக்கக் கூடியவர் என்றாலும் ஜன நாயகனில் திணறலைச் சந்தித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. காரணம், இது ஏற்கனவே வெளியான கதை. அதனை ரீமேக் செய்வதுடன் தளபதி வைத்திருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கான ’மாஸ்’ திரைப்படமாகவும் மாற்ற வேண்டும். மேலும், இது முதல்வர் விஜய்யின் இறுதித் திரைப்படம். இந்த அழுத்தங்களால் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. வினோத் ஜன நாயகனை மோசமான திரைப்படமாகக் கொடுக்கவில்லை. அதேநேரம், இதனைச் சிறப்பான படமென்றும் கூறிவிட முடியாது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தளபதி திரையில் தோன்றும் அறிமுகக் காட்சி மிகச் சிறப்பாக, ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் விதத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ஜன நாயகனில் அந்த அறிமுகக் காட்சி தட்டையாக இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். பகவந்த் கேசரிதான் என்றாலும் முதல் காட்சியை நம்பகத்தன்மை கொண்ட கமர்சியல் காட்சியாக எடுக்கவில்லை. முக்கியமாக, ஒரு நல்ல காட்சி வந்ததும் அடுத்தது வசனங்களால் நிறைந்த இன்னொரு காட்சி எமோஷனாக மாற வேண்டிய இடங்களைச் சாதாரணமாக்குகிறது. தெலுங்கில் பாலய்யா பேசிய வசனங்களை அப்படியே தமிழ்ப்படுத்திவிட்டது போன்ற வசனங்கள் சோதிக்கின்றன.
பெண்கள் முன்னேற்றம், பெண்களிடமிருந்து அகல வேண்டிய அச்சம், கிளர்ந்தெழ வேண்டிய தைரியம் என்கிற கதையில் இந்து - முஸ்லீம் கலவரங்கள் குறித்த காட்சிகள் சரியான அரசியலைப் பேசியிருந்தாலும் இன்னும் கவனமாக அதனைக் கையாண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
முதல்வர் விஜய்க்கு இது 69-வது திரைப்படம். கடைசித் திரைப்படம் என்றாலும் பெரிதாக நடிப்பில் மெனக்கெடல் இல்லை. எப்போதும் போல தனக்கான காட்சிகளில் ஆள்கிறார். சிரித்தால், அழுதால், கிண்டலடித்தால் விஜய் எப்படி நடிப்பாரோ அதேபோன்ற நடிப்புதான் இப்படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அவர் இன்னும் கூடுதல் காட்சிகளில் வந்திருக்கலாம். வில்லனான பாபி தியாலுக்கு குறைவான காட்சிகள்தான் என்றாலும் வலுவான கதாபாத்திரமாகத் தெரிகிறது. கதையின் நாயகியான மமிதா பைஜூ நல்ல நடிப்பு. எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதனை மிகச் சரியாக செய்ய பழகிவிட்டார். வெகுளியும், பயமும் கொண்ட கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். பூஜா ஹெக்டே? வழக்கமாக கமர்சியலில் பயன்படுத்தும் அளவே வருகிறார்.
இசையமைப்பாளர் அனிருத் உயிரற்ற பல காட்சிகளுக்குத் தன் பின்னணி இசையால் ரசிக்க வைக்கிறார். ராவணன் மகன்டா பிஜிஎம், பல சண்டைக் காட்சிகளில் வெவ்வேறு விதமாக இடம்பெற்று சோர்வைக் கட்டுப்படுத்துகின்றன. பாடல்களில் தளபதி கச்சேரி விசில் சப்தங்களை எழுப்புகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் என கதைக்குள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை செய்யப்பட்டிருந்தாலும் 3 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் என்பதால் அவற்றின் பங்கு தனியாகத் தெரியவில்லை.
இறுதியாக ஒரு நடனம் என முதல்வர் விஜய் தன் திரை வாழ்விற்கு ஓய்வு அளித்திருக்கிறார். அந்த நடனத்தில் சில குறைகள் தென்படுகின்றன. ஆனாலும் அது மோசமான நடனமில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
The movie Jana Nayagan, starring Vijay, has been released in theaters today on a grand scale.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.